ADDED : ஆக 17, 2026 06:13 PM
புதுச்சேரி: புதிய மண்டல வாரியம் அமைப்பது தொடர்பாக, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் இ.எஸ்.ஐ., அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி மாநிலத்தில் இ.எஸ்.ஐ., திட்டம் மூலம் தற்போது 1 லட்சத்து, 2 ஆயிரத்து, 740 தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் பயன் பெற்று வருகின்றனர்.
இந்த சேவைகளை வழங்க மாநிலத்தில் ஒரு இ.எஸ்.ஐ மருத்துவமனை, 15 மருந்தகங்கள், 6 கிளை அலுவலகங்கள் மற்றும் ஒரு மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகின்றன.
கடந்த, 2023ம் ஆண்டு ஜூலை மாதம் அமைக்கப்பட்ட மண்டல வாரியத்தின் பதவிக் காலம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.
இதனையடுத்து, அடுத்த மண்டல வாரிய கூட்டத்திற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மற்றும் புதிய மண்டல வாரியம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் நேற்று சட்டசபையில் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில், புதிய சமூக பாதுகாப்புச் சட்டத்தொகுப்பு 2020-ன் கீழ் வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிவிக்கையில், புதுச்சேரி அரசு சார்பில் தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் பிரதிநிதிகள் எண்ணிக்கை தலா 3 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை 6 உறுப்பினர்களாக உயர்த்த வேண்டும் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு கடிதம் அனுப்பி, வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை, 13 ம் தேதி மத்திய அரசு இதழில் வெளியிடப்பட்ட வரைவு அறிக்கை மீது, ஈ.எஸ்.ஐ பயனாளிகள், தொழிற்சங்கத்தினர், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வரும் 27 ம்தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினைப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
