நிதிஷ் குமார் அரசை ஆதரிக்கத் தயார், ஆனால்...: ஒவைசி நிபந்தனை இதுதான்!
நிதிஷ் குமார் அரசை ஆதரிக்கத் தயார், ஆனால்...: ஒவைசி நிபந்தனை இதுதான்!
ADDED : நவ 22, 2025 02:27 PM

பாட்னா: நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட சீமாஞ்சல் பகுதிக்கு நீதி கிடைக்கும் பட்சத்தில், நிதிஷ் குமார் தலைமையிலான பீஹார் அரசை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.
பீஹார் தேர்தலில் ஐந்து இடங்களை வென்றுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியதாவது: வளர்ச்சி என்பது தலைநகர் பாட்னா மற்றும் ராஜ்கிர் ஆகிய பகுதிகளில் மட்டும் நின்றுவிடக் கூடாது. நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட சீமாஞ்சல் பகுதிக்கு நீதி கிடைக்கும் பட்சத்தில், நிதிஷ் குமார் தலைமையிலான பீஹார் அரசை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன்.
எவ்வளவு காலம் எல்லாம் பாட்னா மற்றும் ராஜ்கிரை மையமாக கொண்டு வளர்ச்சி பணிகள் நடக்கும். சீமாஞ்சல் நதி அரிப்பு, பெரிய அளவிலான இடம்பெயர்வு மற்றும் பரவலான ஊழலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. புதிய அரசு இந்த பிரச்னைகளை தீர்க்க வேண்டும். எங்கள் ஐந்து எம்.எல்.ஏ.க்களும் வாரத்திற்கு இரண்டு முறை அந்தந்த தொகுதி அலுவலகங்களில் அமர்ந்து, அவர்களின் வாட்ஸ் அப்பில் இருந்து எனக்கு நேரடியாக புகைப்படங்களை எடுத்து அனுப்புவார்கள்.
அது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை நான் சரியாக கண்டறிய முடியும்.நாங்கள் ஆறு மாதங்களுக்குள் இந்த வேலையைத் தொடங்க முயற்சிப்போம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நானும் சென்று நேரில் ஆய்வு செய்ய முயற்சி செய்வேன். இவ்வாறு அசாதுதீன் ஒவைசி கூறினார்.
சீமாஞ்சல் பகுதி எங்கே இருக்கு?
பீஹாரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சீமாஞ்சலில், முஸ்லிம் மக்கள் தொகை அதிகமாக உள்ளது, மேலும் இது மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாகும். கோசி நதியின் பெருக்கெடுப்பு காரணமாக இந்தப் பகுதி ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. சீமாஞ்சலின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 80% பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

