எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயார்!விவாதத்துக்கு வரும்படி மத்திய அமைச்சர் அமித் ஷா அழைப்பு
எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயார்!விவாதத்துக்கு வரும்படி மத்திய அமைச்சர் அமித் ஷா அழைப்பு
UPDATED : ஆக 12, 2026 10:08 PM
ADDED : ஆக 12, 2026 09:32 PM
புதுடில்லி: ''லோக்சபாவில், மாணவர்கள் போராட்டம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க, முதலில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எதிர்க்கட்சிகள் முறைப்படி கடிதம் அளிக்க வேண்டும். விவாதம் தொடங்கியதும், அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயாராக இருக்கிறன்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 20ல் தொடங்கிய நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. தொடக்கம் முதலே, டில்லி ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி, பெல்லட் குண்டு பயன்பாடு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி, பார்லி.,யை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. லோக்சபா, ராஜ்யசபாவில் எந்த அலுவல்களும் நடக்காததால், மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணம் வீணாகிறது.
இந்நிலையில், பார்லி., வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
லோக்சபாவில், மாணவர்கள் போராட்டம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க, முதலில், சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எதிர்க்கட்சிகள் முறைப்படி கடிதம் அளிக்க வேண்டும். அதன் மீது விவாதம் தொடங்கியதும், எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளிக்க தயாராக இருக்கிறேன்.
இன்று பிற்பகல், 3:00 மணி வரை விவாதத்துக்கு தயார். விவாதம் வேண்டுமா அல்லது தொடர்ந்து அமளி செய்ய வேண்டுமா என்பதை எதிர்க்கட்சிகள் தான் தீர்மானிக்க வேண்டும். நான் தலைமறைவாகி விட்டதாகவும், பார்லி., பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் சுமத்துகின்றனர்.
அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து நான் தினமும் பார்லி.,க்கு வந்தபடி தான் உள்ளேன். என் அறையில் அமர்ந்து அனைத்தையும் கவனிக்கிறேன். பார்லி.,யின் இரு சபைகளையும் செயல்பட விடாமல் எதிர்க்கட்சிகள் முடக்கும் போது, அங்கு சென்று நான் என்ன செய்வது? இரு சபைகளும் செயல்படாத நிலையில், அங்கு செல்வதால் மட்டும் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. பார்லி., முடக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம்.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான தடியடி பற்றி அரசு விவாதிக்க தயாராக இருப்பதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார். ஆனால் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் தான் பயப்படுகின்றன. எந்த நேரத்திலும் விவாதத்துக்கு நாங்கள் தயார். இப்போது யார் ஓட்டம் பிடிக்கின்றனர் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். எங்களிடம் மறைக்க ஒன்றுமில்லை. எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளிக்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கற்பனை கதை வேண்டாம்! பார்லி.,யில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கற்பனை கதைகளை கேட்க நாங்கள் தயாராக இல்லை. அவர் எங்களுக்கு எந்த சொற்பொழிவும் ஆற்ற வேண்டாம். மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிக் குண்டு பயன்படுத்த உத்தரவிட்டது யார் என்பதை அவர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவர் உத்தரவிட்டிருந்தால், அவர் குற்றவாளி என்பதால் பதவி விலக வேண்டும்; உத்தரவிடவில்லை என்றால் திறமையற்றவர் என்பதால், அவர் பதவி விலக வேண்டும். இதை விடுத்து மடைமாற்றம் செய்யும் முயற்சிகளில் அமித் ஷா ஈடுபட வேண்டாம். ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்
