மூளையை தின்னும் அமீபா பரவல்: சபரிமலை பக்தர்கள் உஷார்
மூளையை தின்னும் அமீபா பரவல்: சபரிமலை பக்தர்கள் உஷார்
UPDATED : நவ 16, 2025 06:55 AM
ADDED : நவ 16, 2025 03:23 AM

பத்தனம்திட்டா: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று பரவி வரும் நிலையில், சபரிமலை வரும் பக்தர்கள் நீர் நிலைகளில் குளிக்கும் போது, மூக்கிற்குள் நீர் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை, அம்மாநில சுகாதாரத்துறை வழங்கிஉள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு, இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை காலம் நாளை துவங்குகிறது. இதற்காக இன்று மாலை 5:00 மணிக்கு அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.
மண்டல பூஜை காலத்தில், 41 நாட்கள் கோவில் திறந்திருக்கும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவர். அதன்பின், மகர விளக்கு பூஜை காலம் துவங்கும்.
அப்போது, 21 நாட்கள் வரை கோவில் திறந்திருக்கும். முக்கிய நிகழ்வான மகர ஜோதி தரிசனம், ஜனவரி 14ம் தேதி நடைபெறும்.
இந்நிலையில், கேரளாவில் சில இடங்களில், 'அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்' என்ற நோய் பரவி வருகிறது.
இது, மூளையை தின்னும் அமீபா என அழைக்கப்படுகிறது. அதனால், கேரள சுகாதாரத்துறை, சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்களுக்காக சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
சபரிமலை வரும் வழியில், ஆறுகளில் குளிக்கும் போது, மூக்குக்குள் நீர் செல்லாமல் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும்
ஏற்கனவே உள்ள பிரச்னைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், அவற்றை தொடர்ந்து சாப்பிட வேண்டும்
மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், அதற்கான ஆவணங்கள் மற்றும் மருந்துகளுடன் பயணிப்பது அவசியம்
சபரிமலை யாத்திரை புறப்படும் முன், நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
மலை ஏறும் போது மெதுவாகவும், இடைவெளி விட்டும் ஏற வேண்டும்
கொதிக்க வைத்த நீரையே குடிக்க வேண்டும்
உணவு சாப்பிடும் முன் கைகளை கழுவ வேண்டும்.
இவ்வாறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவசர மருத்துவ உதவிக்கு 04735 203232 என்ற எண்ணை தொடர்பு கொள்ள, அய்யப்ப பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

