ஐப்பசி மாத பூஜைக்கு சபரிமலை நடை இன்று திறப்பு நாளை மேல் சாந்திகள் தேர்வு
ஐப்பசி மாத பூஜைக்கு சபரிமலை நடை இன்று திறப்பு நாளை மேல் சாந்திகள் தேர்வு
ADDED : அக் 16, 2025 11:20 PM
சபரிமலை: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்படுகிறது. நாளை காலை கார்த்திகை 1 முதல் ஓராண்டு கால பூஜைக்கு புதிய மேல் சாந்தி தேர்வு நடக்கிறது.
இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இன்று வேறு பூஜை இல்லை. இரவு 10:00 மணிக்கு நடையடைக்கப்படும்.
நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்தது அபிஷேகத்திற்கு பின்னர் நெய்யபிஷேகம் தொடங்கும். 7:30 மணிக்கு உஷ பூஜை நிறைவு பெற்றதும் கார்த்திகை 1 முதல் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜை செய்வதற்கான மேல் சாந்தி தேர்வு நடைபெறும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்தவர்களின் பட்டியலில் உள்ள பெயர்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்வு செய்வர். இது போல மாளிகைப்புறத்தமன் கோயிலிலும் குலுக்கல் தேர்வு நடைபெறும்.
தொடர்ந்து வழக்கமான உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை இரவு படிபூஜை ஆகியவை நடைபெறும். பக்தர்களுக்கு இன்று முதல் 20 வரை தரிசனத்திற்கு அனுமதி உண்டு. ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை ஒட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக 21 மற்றும் 22ல் பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை. அக்.22 இரவு 10:00 மணிக்கு நடையடைக்கப்படும்.