ADDED : பிப் 02, 2024 11:01 PM

கே.ஆர்.,புரம்: 'நீ என் மகன் அல்ல' என கூறிய தாயை கொன்ற மகன் போலீசில் சரண் அடைந்தார்.
கோலார் மாவட்டம், முல்பாகலை சேர்ந்தவர் நேத்ரா, 40. பெங்களூரு கே.ஆர்.,புரம் பீமய்யா லே - அவுட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். 17 வயதான முதல் மகன் டிப்ளமோ படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு தாய், மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கோபமடைந்த மகன், சாப்பிடாமல் உறங்க சென்று விட்டார். நேற்று காலை 7:30 மணியளவில் கல்லுாரிக்கு புறப்பட்டு கொண்டிருந்தார்.
அப்போது அவரது தாய், காலை உணவு சாப்பிடாமல் இருப்பதை பார்த்து, ஏன் சாப்பிடவில்லை என மகனை கேட்டுள்ளார். மேலும், கோபத்துடன் 'நீ என் மகனே இல்லை' என்று நேத்ரா கூறி உள்ளார்.
இதனால் கோபமடைந்த மகன், வீட்டில் இருந்து இரும்பு ராடால், தாயின் தலையில் பலமாக அடித்தார்.
ரத்த வெள்ளத்தில், நேத்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த மகன், கே.ஆர்.,புரம் போலீசில் சரண் அடைந்தார்.

