பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
UPDATED : ஏப் 05, 2025 04:08 PM
ADDED : ஏப் 05, 2025 10:00 AM

கொழும்பு: பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருதான ஸ்ரீலங்கா மித்ர விபூஷணா வழங்கப்பட்டது. இலங்கையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
தாய்லாந்து சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷினவத்ராவை சந்தித்தார். பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்றதுடன், பல நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்து கொண்ட பிரதமர் மோடி, நேற்று (ஏப்ரல் 04) இலங்கை தலைநகர் கொழும்பு சென்றார்.
அங்கு அவரை, இலங்கையின் மூத்த 6 அமைச்சர்கள் விஜிதா ஹெராத், நலிந்த ஜெயடிஸ்சா, அனில் ஜயந்தா, ராமலிங்கம் சந்திரசேகர், சரோஜா சாவித்ரி பால்ராஜ், கிறிஸ்ஹந்தா அபேசேனா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்நிலையில், இன்று இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடியை அதிபர் அநுர குமார திசநாயக வரவேற்றார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
கொழும்பு நகரில் இலங்கை அதிபர், பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதார துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
உயரிய விருது
பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய ஸ்ரீலங்கா மித்ர விபூஷணா விருதினை இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக வழங்கினார்.