சட்லெஜ் நதி நீர் பங்கீடு: ஹரியானா - பஞ்சாப் மோதல்
சட்லெஜ் நதி நீர் பங்கீடு: ஹரியானா - பஞ்சாப் மோதல்
ADDED : மே 04, 2025 04:00 AM

சண்டிகர்: ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஹரியானா மற்றும் அண்டை மாநிலமான பஞ்சாப் இடையே சட்லெஜ் நதி நீரை பங்கிடுவதில் பிரச்னை உள்ளது. இந்த நதி நீர், இரு மாநிலங்களின் குடிநீர் மற்றும் பாசன தேவைக்கு அவசியம்.
சமீபத்தில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஹரியானாவுக்கு கூடுதல் தண்ணீர் திறக்க மறுத்தார்.
'ஹரியானா ஏற்கனவே 103 சதவீத ஒதுக்கீட்டை பயன்படுத்தி விட்டது. ஏப்., 6ல் இருந்து ஹரியானாவுக்கு தினசரி வினாடிக்கு 4,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் கூடுதல் நீர் திறக்க சொல்வது கொள்ளையடிப்பதற்கு சமம்' என்றும் கூறினார்.
பஞ்சாப் அரசின் முடிவுக்கு அம்மாநில அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், நேற்று ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் ஹரியானா ஆம் ஆத்மி கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், சட்லெஜ் நதியில் கூடுதல் நீர் திறக்க வேண்டும் என பஞ்சாபிடம் வலியுறுத்துவது என, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து முதல்வர் நயாப் சிங் சைனி கூறியதாவது:
அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்ற பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அதற்கு எதிராக செயல்படுகிறார். அண்டை மாநிலத்தின் தண்ணீர் பிரச்னையையும், அதன் வலியையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும். பஞ்சாப் அரசு உடனடியாக நிபந்தனையின்றி தண்ணீரை விடுவிக்க வேண்டும். நாங்கள் மோதல் போக்கை கடைப்பிடிப்பவர்கள் அல்ல; ஒத்துழைப்பை கோருபவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

