எங்களிடம் நமோ ஏவுகணை இருக்கிறது; பாகிஸ்தானுக்கு ஆந்திர அமைச்சர் எச்சரிக்கை
எங்களிடம் நமோ ஏவுகணை இருக்கிறது; பாகிஸ்தானுக்கு ஆந்திர அமைச்சர் எச்சரிக்கை
ADDED : மே 03, 2025 07:04 AM

ஹைதராபாத்; எங்களிடம் நமோ ஏவுகணை இருக்கிறது என்று தெலுங்கு தேசம் பொதுச் செயலாளரும், ஆந்திர அமைச்சருமான நர லோகேஷ் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமராவதி நகரத்தை மறு உருவாக்கம் செய்யும் திட்டப்பணிகளை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது;
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாகிஸ்தான் நடுங்குவது உறுதி. அவர்களால் எப்போதும் இந்திய மண்ணில் கால் வைக்க முடியாது. ஆந்திரா என்றால் பிரதமருக்கு என்றுமே தனிப்பாசம். மாநிலத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து வருகிறார்.
இதற்கு முன்பிருந்த அரசாங்கம், 3 தலைநகரங்கள் என்ற யோசனையை முன் வைத்து ஒரு செங்கலை கூட வைக்காமல் இருந்தது. அமராவதி என்பது மக்களின் இதயங்களில் வளர்க்கப்பட்ட தலைநகரம்.
பிரதமர் மோடி அமராவதிக்கு அடிக்கல் நாட்டினார். அமராவதியை மீட்டெடுக்க 1631 நாட்கள் அயராது போராடிய விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் தொடங்கியதையும், வணங்கியதையும் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
பஹல்காம் தாக்குதல் மூலம் அப்பாவி மக்களை கொன்ற பாகிஸ்தான் எல்லை தாண்டி உள்ளது. இது பெரிய தவறு. எந்த சக்தியாலும், 100 பாகிஸ்தானியர்களால் கூட இந்தியாவை எதுவும் செய்ய முடியாது. இந்தியா சக்திவாய்ந்த ஏவுகணையை வைத்திருக்கிறது, அதன் பெயர் நமோ(நரேந்திர மோடி). சிங்கத்திடம் ஒருபோதும் விளையாடக் கூடாது.
பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்க பிரதமரின் பின்னால் ஒட்டு மொத்த தேசமும் நிற்கிறது. உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தான் காணாமல் போவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.

