ADDED : செப் 29, 2024 11:54 PM
ஜம்மு, ஜம்மு - காஷ்மீரில் கதுவா மாவட்டத்தின் கோக்மண்ட்லி கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
பாதுகாப்புப் படையினர் போலீசாருடன் இணைந்து நேற்று முன்தினம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி சுட்டனர். இதில், தலைமை கான்ஸ்டபிள் பஷீர் அகமது உயிரிழந்தார்.
படுகாயமடைந்த டி.எஸ்.பி., மற்றும் உதவி சப் - இன்ஸ்பெக்டரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நம் வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உயிரிழந்த நபரை, அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாகவும் பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் ஜம்மு, சம்பா, உதம்பூர் ஆகிய மாவட்டங்களுடன் தற்போது தாக்குதல் நடத்தப்படும் கதுவா மாவட்டத்திலும் சட்டசபை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட ஓட்டுப்பதிவு நாளை நடைபெற உள்ளது.
இதையொட்டி, இப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

