தேசிய போட்டியில் பங்கேற்க ரயில் கழிவறை அருகே பயணம்: வீரர்களுக்கு நேர்ந்த அவலம்
தேசிய போட்டியில் பங்கேற்க ரயில் கழிவறை அருகே பயணம்: வீரர்களுக்கு நேர்ந்த அவலம்
ADDED : டிச 25, 2025 03:19 AM

புவனேஸ்வர்: தேசிய போட்டியில் பங்கேற்க சென்ற ஒடிசா மல்யுத்த வீரர்கள் ரயிலில் கழிவறை அருகே பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
உ.பி., மாநிலம் பல்லியாவில் கடந்த 7-ம்தேதி முதல் 12-ம் தேதி வரையில் 69-வது தேசிய பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டி நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் இருந்து மல்யுத்த போட்டியில் பங்கேற்பதற்காக எட்டு பெண்கள் உட்பட 18 வீரர்கள் மற்றும் விளையாட்டு அதிகாரிகளுடன் பங்கேற்க சென்றுள்ளனர்.நீலாச்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்களுக்கான டிக்கெட்டுகள்உறுதிப்படுத்த முடியாததால் வீரர்கள் தங்கள் உடமைகளுடன் கழிவறை அருகே பயணிக்கும்நிலை உருவானது.
போட்டியில் பங்கேற்று திரும்பிய நாளான 12-ம் தேதி நந்தன்கானன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் டிக்கெட் உறுதிப்படுத்த முடியவில்லை. இதனால் மீண்டும் கழிவறைஅருகே பயணிக்கும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து வீரர்களை அழைத்து சென்ற அதிகாரி ஒருவர் கூறுகையில் பல மணிநேரம் மோசமான சூழ்நிலையில் பயணம் செய்த பிறகு, மேற்கு வங்காள மாநிலம் ஹிஜ்லியில் டிடிஇ-யிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் அவர்களுக்கு 10 இருக்கைகள் கிடைத்தன என்றார்.
போட்டியில் பங்கேற்ற வீரர்ஒருவர் கூறுகையில் நாங்கள் மிகவும் கண்ணியமற்ற முறையில் பயணிக்க வேண்டியிருந்தது. கழிப்பறைக்கு அருகில் இருந்த பகுதி துர்நாற்றம் வீசியது. மக்கள் இறங்குவதற்கும் ஏறுவதற்கும் ரயில் ஒவ்வொரு நிலையத்திலும் நிற்கும்போதெல்லாம் நாங்கள் எங்கள் உடைமைகளுடன் நகர வேண்டியிருந்தது. எங்களால் விளையாட்டுகளில் கவனம் செலுத்த முடியவில்லை,' என்றார்.
இசசம்பவம் அனைத்து தரப்பினரிடையே கடும் விமர்சனங்களை உருவாக்கியது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பு ஒன்றில் துறையின் சார்பில் பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் வீரர்களுக்கான டிக்கெட்டுகளை உறுதிப்படுத்த முடியவில்லை.அதே நேரத்தில் இளம் மல்யுத்த வீரர்கள் தேசிய அளவிலான சாம்பியன்சஷிப் போட்டியில் பங்கேற்கும்வாய்ப்பை இழந்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். என தெரிவித்துள்ளது.

