ADDED : ஜன 16, 2025 09:33 PM
பவானா: மூன்று லட்ச ரூபாய் கடன் கொடுத்தது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தொழிற்சங்கத் தலைவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
பவானா தொழிற்சாலை பகுதியில் உள்ள சங்கத் தலைவர் ராஜன் லம்பா, 69. இவர் கடந்த மாதம் 1ம் தேதி திடீரென மாயமானார். அவரை கண்டுபிடித்துத் தரும்படி அவரது மகன் வினீத் லம்பா, போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பவானா பகுதியில் உள்ள ஷேர்சிங் என்பவருக்குச் சொந்தமான தொழிற்சாலையில் 2ம் தேதி சாக்குப்பையில் கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
கொலை வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த புலந்த்ஷாகரைச் சேர்ந்த ஷேர் சிங், உத்தம் நகரைச் சேர்ந்த ஹரீஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
தனக்குத் தெரிந்த ஒருவருக்கு 3 லட்ச ரூபாயை ராஜன் கடனாக கொடுத்துள்ளார். அதை திருப்பிக் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அவர் இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டது, விசாரணையில் தெரிய வந்தது.