ADDED : ஜன 17, 2025 07:11 AM

நெலமங்களா: சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திரா கார் மோதியதில், ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை போட்டு இருந்த இரண்டு பெண்கள் காயம் அடைந்தனர்.
சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திரா. இவர் நேற்று காலை தனது பென்ஸ் காரில் சித்ரதுர்காவிலிருந்து பெங்களூருக்கு வந்து கொண்டு இருந்தார். காரை டிரைவர் ஓட்டினார். பெங்களூரு ரூரல் நெலமங்களா அருகே பேகூர் கிராமத்தில் கார் வந்தபோது, சாலையை கடந்த இரண்டு பெண்கள் மீது மோதியது.
அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனடியாக காரை நிறுத்தினார். கார் மோதியதில் காயம் அடைந்த இரு பெண்களையும், தனது காரில் மருத்துவமனைக்கு வீரேந்திரா அழைத்து சென்றார்.
பிந்து என்ற பெண்ணுக்கு கை, கால் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவரது மாமியாருக்கு கையில் காயம் ஏற்பட்டது. பயப்படும்படியாக இருவருக்கும் இதுவும் இல்லை என்று டாக்டர்கள் கூறினர். இரண்டு பெண்களும் தமிழகத்தின் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தை ஏற்படுத்திய பென்ஸ் காரை, நெலமங்களா போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவரிடம் விசாரணை நடக்கிறது.