ADDED : மார் 16, 2024 06:31 AM

மாண்டியா: ''கடவுள் என் தலையில் என்ன எழுதி வைத்துள்ளார் என்பது தெரியவில்லை. இளைஞர்கள் கட்சிக்கு வர வேண்டும்,'' என, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் கூறியபோது, அவரது தந்தை குமாரசாமி கண்ணீர் விட்டு அழுதார்.
மாண்டியாவில் நேற்று லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ம.ஜ.த., கூட்டம் நடந்தது. அப்போது நிகில் பேசியதாவது:
இன்னும் நான்கைந்து நாட்களில் எனது தந்தைக்கு, மூன்றாவது முறையாக இதய அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. அவர் ஆரோக்கியத்துடன் மருத்துவமனையில் வர வேண்டும். இதற்காக தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமியை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
எனக்கு அதிக சக்தியும், மக்களுக்கு சேவை செய்யும் வகையில் எனது தந்தைக்கு நீண்ட ஆயுளும் தர வேண்டும். (அப்போது குமாரசாமி கண்ணீர் விட்டு அழுதார்).
அறுவை சிகிச்சைக்கு பின், மாண்டியாவில் எனது தந்தை சுற்றுப்பயணம் மேற்கொள்வார். நானும் அனைத்து கிராமங்களுக்கும் செல்வேன். மக்களின் காலை பிடித்து என்ன தவறு செய்தோம் என கேட்பேன்.
இம்முறை அவரால் முழுவீச்சில் தேர்தல் பணியில் ஈடுபட முடியாது. நான் தான், மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.
கடவுள் என் தலையில் என்ன எழுதி வைத்துள்ளார் என்பது தெரியவில்லை. இளைஞர்கள் கட்சிக்கு வர வேண்டும்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் நான் சிறுவன். அரசியல் அனுபவம் இல்லை. ஆனாலும் எனக்கு 5.75 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். என் மீது நீங்கள் அளவுக்கு அதிகமான அன்பு வைத்துள்ளதற்கு நன்றி.
தேர்தலை சாத்வீக முறையில் அமைதியாக நடக்க வேண்டும். இம்மாவட்டத்தின் நாடியை நானும், தந்தையும் அறிந்துள்ளோம். கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலுக்கான பரிகாரமாக இந்த தேர்தல் முடிவு அமைய வேண்டும்.
காங்., இரட்டை நாக்கு
காங்கிரஸ் இரட்டை நாக்குடன் அரசியல் பேசுகிறது. சமீபத்தில் மாண்டியாவில் நடந்த பயனாளிகள் மாநாட்டில் பேசிய முதல்வர், 'சுயேச்சை வேட்பாளரின் வெற்றிக்கு காரணம், காங்கிரஸ் ஓட்டுகள் தான்' என்கிறார். துணை முதல்வர் சிவகுமாரோ, 'நான் குமாரசாமியின் பலத்தை அதிகப்படுத்தேன்' என்று கூறுகிறார்.
ஒரே மேடையில் இருவரின் இரட்டை நாக்கு அரசியல் தெளிவாக தெரிகிறது. முடிந்து போன அத்தியாயத்தை எதற்காக மீண்டும் தோண்டி எடுக்க வேண்டும்?
இவ்வாறு அவர்பேசினார்.
மாண்டியாவில் நிகில் குமாரசாமி போட்டி?
கோலார், மாண்டியாவில் ம.ஜ.த., வேட்பாளர் யார் என்பது தெரியவில்லை என்றாலும், மாண்டியாவில் குமாரசாமி அல்லது நிகில் நிற்க வேண்டும் என்று அக்கட்சி தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர்.
நேற்று மாண்டியாவில் நடந்த லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் கூட்டத்திலும் எதிரொலித்தது. கூட்டம் துவங்கியதும் மாண்டியாவில் குமாரசாமி அல்லது நிகில் போட்டியிட வேண்டும் என, தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது குமாரசாமி, 'உங்கள் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்யமாட்டோம். நிகிலிடம் ஒருவார்த்தை சொல்கிறேன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவோம்' என கூறினார்.
இதன் மூலம் மாண்டியாவில் நிகில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனாலும், அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

