உலக பொருளாதார மன்ற கூட்டம்: 4 மாநில முதல்வர்கள் பங்கேற்பு
உலக பொருளாதார மன்ற கூட்டம்: 4 மாநில முதல்வர்கள் பங்கேற்பு
ADDED : டிச 15, 2025 01:15 AM

புதுடில்லி: அடுத்த மாதம் நடக்கவுள்ள உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில், மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், ஆண்டுதோறும் உலக பொருளாதார மன்றத்தின் கூட்டம் நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான கூட்டம், 2026 ஜன., 19 முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. இதில், 130 நாடுகளைச் சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தவிர, 60 நாடுகளின் அரசு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களும் பங்கேற்கின்றனர்.
பொது- - தனியார் ஒத்துழைப்பு மூலம் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வது குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், தெலுங்கு தேசத் தலைவரான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரசைச் சேர்ந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆகியோர் பங்கேற்கின்றனர். பல்வேறு மத்திய இணை அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
இது தவிர, 'ரிலையன்ஸ்' குழும தலைவர் முகேஷ் அம்பானி, 'டாடா' குழும தலைவர் என்.சந்திரசேகரன், 'பஜாஜ்' குழும தலைவர் சஞ்சீவ் பஜாஜ் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
உலகத் தலைவர்களில் உலக வங்கியின் தலைவர் அஜய் எஸ்.பங்கா, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

