/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
மாலிக்யூலர் பயாலஜி மூலக்கூறு உயிரியல்
/
மாலிக்யூலர் பயாலஜி மூலக்கூறு உயிரியல்
நவ 07, 2008 12:00 AM
நவ 07, 2008 12:00 AM
உயிரினங்களின் அமைப்பில் மூலக்கூறு அமைப்பையும், செயல்படும் தன்மையையும் பற்றி படிக்கும் உயிரியலின் ஒரு பிரிவே மாலிக்யூலர் பயாலஜி என்றழைக்கப்படுகிறது. மாலிக்யூலர் பயாலஜியின் படிப்புகளில் பின்வரும் பகுதிகளில் பாடப்பகுதிகள் இருக்கும்: * நுண்ணுயிரிகளிலும், விலங்குகளிலும் உள்ள செல்களில் மூலக்கூறுகள் வாயிலாக ஜீன்களை கட்டுப்படுத்துதல். * பல்வேறுபட்ட நுண்ணுயிரிகளின் உயிரியல் தன்மைகள். * மூலக்கூறு அடிப்படையிலான உயிரின வளர்ச்சி. * விலங்கின செல்களின் அமைப்பும், அவற்றின் உள்கூறுகளின் செயல்பாடுகளும். * புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கான மூலக்கூறு அடிப்படையிலான காரணங்கள். * விலங்கின செல்களுக்கும், நுண்ணுயிரிகள் மற்றும் வைரஸ்களுக்கும் இடையிலான உறவு. * டி.என்.ஏ.,க்களை மாற்றுவதன் மூலம் அடிப்படை அறிவியல் மற்றும் பயோ டெக்னாலஜியில் சிக்கல்களை தீர்வுசெய்யும் முறை. படிப்புகளும், தகுதிகளும்: மாலிக்யூலர் பயாலஜியில் பொதுவாக முதுநிலைப் படிப்பு அளவிலேயே படிப்புகள் உள்ளன. பட்டப்படிப்பு அளவிலோ அல்லது பிளஸ் 2 அளவிலோ உயிரியலை ஒரு பாடமாக எடுத்து படித்திருந்தால் மட்டுமே முதுநிலை அளவில் மாலிக்யூலர் பயாலஜி படிப்புகளை படிக்க முடியும். பி.எஸ்.சி., பட்டப்படிப்பில் ஜெனிடிக்ஸ், மைக்ரோ பயாலஜி, விலங்கியல் அல்லது தாவரவியல் படித்தவர்கள் மாலிக்யூலர் பயாலஜியில் எம்.எஸ்.சி., படிப்புகளில் சேரமுடியும். மாலிக்யூலர் பயாலஜிப் பிரிவில் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் சி.எஸ்.ஐ.ஆர்.,யூ.ஜி.சி நெட் தேர்வுகளையோ அல்லது உயிர் அறிவியல் பிரிவில் ஐ.சி.எம்.ஆர்., ஜே.ஆர்.எப்., தேர்வுகளையோ கட்டாயம் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல் பயோடெக்னாலஜியை ஒரு பாடமாக கொண்டு இன்ஜினியரிங் அல்லது பி.பார்ம்., படித்து குறைந்த பட்சம் 85 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்வு எழுதியவர்களும் நுழைவுத்தேர்வு அல்லது இன்டர்வியூ மூலமாக ஆராய்ச்சி படிப்புகளில் சேர முடியும். வாய்ப்புகள்: மாலிக்யூலர் பயாலஜி என்பது அறிவியல் பிரிவுகளில் இன்றுவரை ஒரு அரிதான பிரிவாகவே உள்ளது. அறிவியலின் பிற பிரிவுகளை ஒப்பிடும் போது, இப்பிரிவில் போட்டிகள் குறைவுதான். ஆனால், இப்பிரிவினருக்கு சவால்கள் அதிகம் உள்ளதோடு வெற்றி பெறுபவர்களுக்கு ஆதாயமும் அதிகம் உள்ளது. நல்ல கல்வித்தகுதியும், துறை சார்ந்த ஈடுபாடும் உள்ளவர்களுக்கு மாலிக்யூலர் பயாலஜி நல்ல பணி வாய்ப்புகளை தரவல்லது. அரசு சார்ந்த ஆராய்ச்சி மையங்களிலும், தனியார் மருந்து கம்பெனிகளின் ஆராய்ச்சி பிரிவுகளிலும் மாலிக்யூலர் மற்றும் செல் பயாலஜிஸ்ட்களுக்கு நல்ல பணி வாய்ப்புகள் உள்ளன. மருத்துவத்துறை வளர்ச்சி தொடர்புடைய மருந்து பிரிவுகளில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி தொடர்புடைய பணிகளில் இவர்கள் ஈடுபடலாம். இவை தவிர, இன்று உலக அளவில் பேசப்படும் குளோனிங், சப் குளோனிங், சிந்தடிக் ஆர்.என்.ஏ., டிரான்ஸ் கிரிப்ஷன், ஜீன் எக்ஸ்பிரஷன், செல் வளர்ச்சி, செல் தொடர்புடைய அமைப்பு , பல்வேறு தகவல்களை பதிவு செய்தல் போன்ற ஆய்வுக்கூட பணிகளில் நல்ல வாய்ப்புகளை பெறலாம். மாலிக்யூலர் மற்றும் செல் பயாலஜிஸ்ட்களாக பணி புரிபவர்கள் துறை தொடர்புடைய பல்வேறு தகவல்களை அவ்வப்போது பதிவு செய்துகொள்வது அவர்கள் பணியின் முக்கிய அங்கமாக உள்ளது. இத்துறை ஆராய்ச்சிகளின் முடிவை செயல்படுத்துவதன் மூலம் மனிதர்களின் ஆரோக்கியம் தொடர்புடைய பல்வேறு பிரச்னைகளை தீர்க்கும் என்பதாலும், சில நோய்களையே தீர்க்கும் என்ற ரீதியில் இயங்குவதாலும் செல் மற்றும் மாலிக்யூலர் பயாலஜிஸ்ட்களின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. சம்பளம் எப்படி?: தனியார் மற்றும் அரசு துறை சார்ந்த மாலிக்யூலர் பயாலஜிஸ்ட்களுக்கு நல்ல ஊதிய விகிதங்கள் காத்திருக்கின்றன. இருந்தாலும், தனியார் மருந்துக்கம்பெனிகளின் ஆராய்ச்சி பிரிவுகளில் பணியாற்றும் மாலிக்யூலர் பயாலஜிஸ்ட்களே நல்ல ஊதிய விகிதங்களை பெறுகின்றனர். இங்கு பணிபுரியும் மாலிக்யூலர் பயாலஜிஸ்ட்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

