நவ 09, 2011 12:00 AM
நவ 09, 2011 12:00 AM
மாணவர்கள் மத்தியில் மருத்துவத்துறையில் அதிகம் அறிமுகம் இல்லாத ஆனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படிப்பாக இருப்பது அனஸ்தெடிஸ்ட் ஆகும்.
ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பாக, அவருக்கு எவ்வளவு மயக்க மருந்து செலுத்த வேண்டும், அவரது உடல் நிலை அறுவை சிகிச்சைக்கு ஏற்றதாக உள்ளதா என்பதை கண்டறிந்து சொல்லும் வேலையை செய்பவரே அனஸ்தெஸியாலஜிட் ஆவார். எந்த ஒரு அறுவை சிகிச்சையாக இருப்பினும், அனஸ்தெஸியாலஜிஸ்டின் ஆலோசனை இன்றி மருத்துவர்கள் செய்ய மாட்டார்கள். அவ்வளவு முக்கியத்தும் வாய்ந்த துறையாக அனஸ்தெடிஸ்ட் கருதப்படுகிறது.
அனஸ்தெஸியாலஜிஸ்டிடம் வரும் நோயாளியின் உடல் நிலை அறுவை சிகிச்சைக்கு ஏற்றதாக உள்ளதா, அவருக்கு மயக்க மருந்தை செலுத்தினால் தெளியும் நிலையில் உள்ளாரா, அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் பாதிப்புகளை தாங்கும் உடல் நிலையில் உள்ளரா என்பதை கண்டறிந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதா அல்லது தள்ளிப்போட வேண்டுமா என்பதை பரிந்துரை செய்வதோடு மட்டுமல்லாமல், அறுவை சிகிச்சையின் போது உடன் இருந்து அவருக்கு மயக்க மருந்து அளித்து, அவர் தெளிந்ததும் அவரை சுய பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை மையத்தில் இருந்து வெளியேற்றும் வரை ஒரு அனஸ்தெடிஸ்ட் கவனமாக செயல்பட வேண்டி உள்ளது.
எனவே, மருத்துவத் துறையில் மிகச் சிறந்த இடத்தை அடைய வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ். முடித்து அனஸ்தெடிஸ்ட் படிப்பினை மேற்கொள்ளலாம். தற்போது ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் மயக்க மருந்து நிபுணர்களின் தேவை அதிகமாகவே உள்ளது.
இப்படிப்பை ஒரு படிப்பாகக் கருதாமல், மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு படிக்க வேண்டும். சிறந்த மயக்கமருந்து நிபுணர் ஆக வேண்டும் என்றால், கடின உழைப்பு, அதீத கவனம், அக்கறை, ஒழுக்கம், ஈடுபாடு என அனைத்தையும் இத்தொழிலில் காட்ட வேண்டியது அவசியம். ஏனென்றால், வேறு பணிகளில் செய்யும் தவறுகள் அனுபவத்தையோ அல்லது சில ரூபாய்கள் இழப்பையோ தரலாம். ஆனால் அனஸ்தெடிஸ்ட் பணியில் செய்யப்படும் தவறுகள் உயிர் இழப்பையே ஏற்படுத்திவிடும்.
கல்வித் தகுதி
எம்.பி.பி.எஸ். படித்து முடித்தவர்கள் சிறப்பு படிப்பான அனஸ்தெடிஸ்ட் படிப்பை படிக்கலாம். நான்கரை ஆண்டுகளைக் கொண்ட எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள், ஒன்றரை ஆண்டு காலம் ஏதேனும் மருத்துவமனை அல்லது மருத்துவத் துறையில் பணி அனுபவம் பெற வேண்டும். அதன்பிறகுதான் ஒரு மாணவர் அவர் விரும்பிய மருத்துவ மேற்படிப்பைத் தொடர முடியும். அதன்பிறகே அனஸ்தெடிஸ்ட் என்ற படிப்பை படிக்கலாம்.
அனஸ்தெடிஸ்ட் படிப்பு
அனஸ்தெடிஸ்ட் படிப்பு காலத்தில், எலும்பு பிரிவு, அவசர கால சிகிச்சை, மருந்தியல், அறுவை சிகிச்சை குறித்த பாடங்களும் கற்பிக்கப்படும். அனஸ்தெடிஸ்ட் ஆக விரும்புபவர், இறுதி ஆண்டில் அனஸ்தெடிஸ்ட் பாடத்தை தேர்வு செய்து படித்து அதில் நிபுணர் ஆகலாம். இதில் நியூரோசர்ஜிகல் அனஸ்தாலஜி என்ற கூடுதல் படிப்பையும் தேர்வு செய்து படிக்கலாம்.
கல்விக் கட்டணம்
கல்விக் கட்டணம் நிறுவனத்திற்கு நிறுவனம் வேறுபடும். அரசு மருத்துவக் கல்லூரியில் சில ஆயிரங்கள் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படும். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் ரூ.20 லட்சம் வரை கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு மற்றும் வருவாய்
தற்போதைய சூழ்நிலையில் பெருகி வரும் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை காரணமாக, அனஸ்தெடிஸ்ட் படித்தவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பும் நல்ல எதிர்காலமும் உள்ளது. படித்து முடிந்ததுமே 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறலாம். தொடர்ந்து கடின உழைப்பையும், நன்மதிப்பையும் பெறும் அனஸ்தெஸியாலஜிஸ்ட், ஒரே நேரத்தில் பல மருத்துவமனைகளில் பணியாற்றும் வாய்ப்பையும் பெறலாம். ஒரு மாதத்தில் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது.
