ஏப் 25, 2012 12:00 AM
ஏப் 25, 2012 12:00 AM
இன்றைய கார்பரேட் உலகில், ப்ரீலேன்சிங் என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குகிறது. எங்கேயிருந்து பணியாற்றுகிறோம், எந்த நேரத்தில் பணியாற்றுகிறோம் என்பது முக்கியமல்ல இங்கே. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்டப் பணியை நிறைவுசெய்கிறோமா என்பதே முக்கியம். நெரிசலான நகர்ப்புற வாழ்க்கையில், குறிப்பிட்ட நேரத்திற்குள் அவசர அவசரமாக புறப்பட்டு, அலுவலகம் வந்து, ஒரேமாதிரியான சூழ்நிலையில், ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றி, பின்னர், மாலையில் மீண்டும் புறப்பட்டு நெரிசலில் சிக்கி வீட்டிற்கு செல்வதை வெறுக்கும் நபர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்தான் ப்ரீலேன்ஸ் பணி.
ப்ரீலேன்ஸ் பணியின் மூலம் ஒருவர் தன்னை நன்கு ரிலாக்ஸ் செய்துகொள்ள முடிகிறது. தனது பிற சொந்த வேலைகளையும் பார்த்துக்கொண்டு, அலுவலகப் பணியையும் மேற்கொள்ள முடிகிறது. இதனால், தேவையற்ற மனஉளைச்சல் தவிர்க்கப்படுகிறது.
ப்ரீலேன்ஸ் பணி முறையானது இந்தியாவில் இன்னும் பெரியளவில் வளர்ச்சியடையவில்லை என்றாலும், அடுத்த சில வருடங்களில் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்பு சந்தையில், பல்வேறுவிதமான ப்ரீலேன்ஸ் வாய்ப்புகள் உள்ளன. வெவ்வேறு வகையான நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான குறிப்பிட்ட திறனுள்ள ப்ரீலேன்ஸ் பணியாளர்களை எதிர்பார்க்கின்றன.
ப்ரீலேன்ஸ் பணிசெய்ய விரும்புபவர்கள், www.freelanceindia.com போன்ற ஆன்லைன் forum மூலமாக தங்களின் விபரங்களைப் பதிவுசெய்து கொள்கிறார்கள். இதன்மூலம், அவர்களுக்கு, பணிவழங்குநர்களின் தொடர்பு கிடைக்கிறது. கொடுத்தப் பணியை திருப்தியாக செய்வதன் மூலமாக, பணிவழங்குநர்கள், எதிர்காலத்தில், தாங்களே நேரடியாக ப்ரீலேன்ஸ் பணியாளர்களைத் தொடர்பு கொள்கிறார்கள்.
சுயசார்பு
ப்ரீலேன்சிங் பணியை, ஒருவர், படிப்பை முடித்தப் பிறகுதான் மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. படிக்கும்போதே சம்பாதித்து, சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்பைப் பெறலாம். இதன்மூலம் ஒரு மாணவரின் தன்னம்பிக்கை வளர்கிறது. படைப்புத்திறன், தொழில்நுட்பத் திறன் மற்றும் இலக்கியத்திறன் உள்ளவர்களுக்கு ப்ரீலேன்ஸ் துறையில் பல பணிவாய்ப்புகள் நிறைந்து கிடக்கின்றன. ப்ரீலேன்ஸ் பணியின் மூலம் ஒருவருக்கு நிறைய அனுபவமும் கிடைக்கிறது. இப்பணியைப் பொறுத்தவரை, இன்னொரு நன்மை என்னவெனில், சீனியர் - ஜுனியர் என்ற வேறுபாடுகள் இருப்பதில்லை. ஒருவரின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை மேம்பாட்டிற்கு ப்ரீலேன்சிங் பணிவாய்ப்புகள் உதவிபுரிகின்றன.
வேலைவழங்குநர்கள் யார்?
முன்பே குறிப்பிட்டதுபோல, குறிப்பிட்ட ஆன்லைன் forum -களில் பதிவுசெய்து, வேலை வழந்குநர்களைக் கண்டறியலாம். அதேசமயம், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் மூலமாகவும் ப்ரீலேன்ஸ் பணிவாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றன. பணிவழங்குநர்களைத் திருப்திபடுத்தும் ப்ரீலேன்சர்களின் காட்டில் எப்போதும் மழைதான்.
வெகுமதிகள்
ப்ரீலேன்ஸ் துறையில் வழங்கப்படும் சம்பளமானது, நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. ஒரு நாள், ஒரு மணிநேரம், எண்ணிக்கை கணக்கு(piece rate), ப்ராஜெக்ட் அடிப்படை என்கிற அளவில் வெகுமதிகள் வேறுபடுகின்றன. சில ப்ரீலேன்சர்கள், பணியை தொடங்குவதற்கு முன்பாகவே, 100% ஊதியத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். சில இடங்களில் பகுதி பகுதியாகவும் ஊதியம் வழங்கப்படுகிறது.
ஒரு அலுவலகத்தில் முழுநேர பணியில் சம்பாதிப்பதைவிட, ப்ரீலேன்ஸ் முறையில், பலர், அதிகமாக சம்பாதிக்கிறார்கள். மாதம் குறைந்தது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் சம்பாதிப்பவர்கள் பலர் உள்ளனர்.
சாதக - பாதகங்கள்
பொருளாதார அந்தஸ்தில் ஸ்திரமாக இல்லாத நபர்களுக்கு, இந்த ப்ரீலேன்ஸ் முறை சரியாக வராது என்ற கருத்து வலுவாக உள்ளது. ஏனெனில், பல நிறுவனங்கள், செய்த வேலைக்கு பணம் தருவதில் கறாராக நடந்து கொள்வதுடன், இழுத்தடிக்கவும் செய்கின்றன. மேலும், செய்யும் பணியில் ஏதேனும் குறைகூறி பணம் தர மறுக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகிறது.
ஆனால், இப்பணியை விரும்புவர்களோ, எங்களுக்கு பணம்தான் அனைத்துமே என்றில்லை, சுதந்திரமாக இருப்பதும், பணத்திற்கும், விருப்பத்திற்கும் இடையில் ஒரு சமரசத்தை செய்துகொள்ள விரும்புகிறோம் என்கிறார்கள். நமக்கு விருப்பமான நேரங்களில் பணிபுரியலாம் என்ற சுதந்திரம் இருக்கும் அதேவேளையில், பணி வழங்குநர்களின் வசதிக்கு ஒத்துப்போவதும் முக்கியம்.
வெற்றிகரமான ப்ரீலேன்சர்
இத்துறையில் வெற்றிகரமான நபராக உருவெடுப்பதென்பது உடனடியாக நடந்துவிடாது. அதற்கு அர்ப்பணிப்பும், சிறிது காலஅவகாசமும் தேவை.
* நீங்கள் செய்யவிருக்கும் பணியைப் பற்றி போதுமான அறிவை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். தொழில்முறை அனுபவத்தைக் கொண்டிருப்பது நன்மைப் பயக்கும்.
* ஒரே மாதிரியான பணிகளையே சிறிதுகாலம் செய்து, அதில் திறமையை நிரூபித்து நற்பெயரை ஈட்டுங்கள்.
* ப்ரீலேன்ஸ் பணிமுறையில் வெற்றிகரமாக இயங்குவதற்கான ஒரு முக்கிய அம்சம் என்னவெனில், பலருடனான தகவல்தொடர்பு மற்றும் நீடித்த பழக்கம். இதன்மூலம், வெளியில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
* உங்களுக்கென ஒரு தனி இணையதளத்தை வைத்து பராமரித்து, உலகளாவிய அம்சங்களை கற்றுக்கொள்ளவும்.
* ஒரு பணியை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துக்கொடுக்க ஒப்புக்கொண்டால், அதை கட்டாயமாகப் பின்பற்றவும். உங்களின் மீதான நம்பிக்கை மற்றும் மதிப்பின் அடிப்படையே இதுதான். ஒருவேளை எதிர்பாராத காரணங்களால், குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியை முடிக்கமுடியாது என்பது தெரிந்தால், முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட வேண்டும். கடைசி நேரத்தில் கைவிரிக்கக்கூடாது.
* உங்கள் பணி வழங்குநருடன் நல்லவிதமான உறவுமுறையைப் பேணுவது முக்கியமானது. உங்களின் கடமையை நீங்கள் சரியாக செய்துவிட்டால், அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.
