மே 16, 2012 12:00 AM
மே 16, 2012 12:00 AM
இன்றைய நவீன யுகத்தில் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் சைபர் கிரைம், மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளை கொண்டு நடத்தப்படும் குற்றங்கள் என குற்றத்தின் வளர்ச்சி தொடர்கிறது.
இந்தக் குற்றங்களைக் கண்டறிய காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் உதவிகரமாக இருப்பது தடய அறிவியல். குற்றங்களும், அதுதொடர்புடைய விஷயங்களும் வளர்ந்த அளவுக்கு, தடய அறிவியல் வல்லுனர்களின் எண்ணிக்கை வளரவில்லை என்றுதான் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கொலை, பாலியல் ரீதியான தொந்தரவுகளை டி.என்.ஏ மூலம் கண்டறிவது, குண்டுவெடிப்பு நடைபெற்ற இடங்களில் கிடைக்கும் தடயங்களை வைத்து அது எந்த மாதிரியான குண்டு என்று கண்டறிவது, ஒரு சில வழக்குகளில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அல்லது ஆயுதம் எந்த வகையைச் சேர்ந்தது என்பது பற்றிய பல்வேறு முக்கிய தடயங்களை கண்டறிய தடய அறிவியல் வெகுவாக உதவி வருகிறது.
இதுமட்டுமின்றி பெண்களுக்கு எதிரான கொடுமைகள், போதைப் பொருட்கள் பயன்பாடு போன்ற ரீதியிலான குற்றங்களை கண்டுபிடிப்பதிலும், தடய அறிவியலின் பங்களிப்பு மகத்தானதாக இருந்து வருகிறது.
தடய அறிவியல் துறையில் கால்பதிப்பதற்கு முன்பாக அதற்குத் தேவையான அடிப்படைத் தகுதிகள் இருக்கின்றனவா என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மற்ற துறைகளைப் போல் அல்லாமல் தடய அறிவியலில் சாதிப்பதற்கு தனித் திறனும், தடயங்களை மூன்றாம் கோணத்தில் பார்க்கும் அறிவும் தேவைப்படும். தர்க்க சிந்தனையும், ஆர்வமும் உள்ளவராக இருக்க வேண்டும்.
இயற்பியல் அல்லது உயிரியல் பாடப் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருப்பதுடன், புள்ளியியல் தொடர்பான விவரங்களும் இருப்பது இந்தத் துறையில் சாதிக்க உதவும். முக்கியமானதாக விசாரணையின் போது நடுநிலைமை வகிக்க, மனப்பற்றின்மை இல்லாதவராக இருக்க வேண்டிய தடயவியல் நிபுணருக்கு அவசியமான தகுதிகளில் ஒன்று.
தடய அறிவியலில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொரு பிரிவுக்கும் வல்லுனர்கள் தேவைப்படுகிறார்கள். உதாரணமாக Fingerprinting, Microbiologists, Psychiatrists, Odontology, Pathology ஆகிய பிரிவுகளுக்கு தடயவியல் வல்லுனர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள்.
கல்வித்தகுதி: Pathologist பிரிவில் தடயவியல் வல்லுனராக MBBS பட்டம் பெற்றிருப்பதுடன், தடயவியல் மருத்துவத்தில் MD பட்டம் முடித்திருக்க வேண்டும். விரல்ரேகை வல்லுனராக Forensic Science/ Genetics/ Molecular Biology பரிவில் முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். நஞ்சு முறிவு தொடர்பான தடயவியல் பிரிவு நிபுணராக Toxicology பாடத்தில் முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்பு அல்லது MBBS முடித்திருக்க வேண்டும். இதுமட்டுமின்றி சைபர் குற்றங்களை ஆராயவும், ஆய்வு செய்யவும் போதிய அளவு கணினி பயிற்சியும் பெற்றிருக்க வேண்டியிருக்கும்.
வேலைவாய்ப்பு: தடயவியல் துறையின் எந்தப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்கிறோம் என்பதை பொறுத்து, அரசு துறைகள், பல்கலைக்கழகங்கள், சட்ட அமைப்புகள், குற்றவியல் ஆய்வுப் பிரிவு, குற்றவியல் ஆய்வகங்களில் தகுந்த சம்பளத்துடன் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும்.
எங்கு படிக்கலாம்: நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தடயவியல் தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன. இயற்பியல் அல்லது உயிரியல் பாடப் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருப்பவர்களுக்கு தடயவியல் தொடர்பான படிப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படுவதில் இருவேறு கருத்துகள் இல்லை. மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் தடயவியல் அறிவியல் தொடர்பான மூன்றாண்டு பி.எஸ்சி. படிப்பு வழங்கப்படுகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தில் Forensic Anthropology பிரிவில் பட்டயப்படிப்பு அளிக்கப்படுகிறது. கர்நாடக் பல்கலைக்கழகத்தில் (Karnatak University) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு Criminology and Forensic Science விருப்பப் பாடமாக தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பலகலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள Bundelhkand பல்கலைக்கழகம், ஆக்ராவில் உள்ள Bhimrao Ambedkar பல்கலைக்கழகம், ஐதராபாத் ஓஸ்மானியா பல்கலைக்கழகம், பாட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம், ஒரிஸ்ஸாவின் புவனேஸ்வரில் உள்ள Utkal பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தடயவியல் தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன.
