மே 16, 2012 12:00 AM
மே 16, 2012 12:00 AM
மனிதர்கள் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காகத் தோன்றிய மொழி காலப் போக்கில் பல மாற்றங்களை சந்தித்து, இன்று உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளாக விரிவடைந்துள்ளது.
இன்றைய உலகயமாக்கல் சூழலில், பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இந்தியாவிலேயே பல மொழிகள் இருந்தாலும், வெளிநாட்டு மொழிகளான ஜெர்மன், பிரெஞ்ச், ஸ்பானிஷ், சைனீஸ், கொரியன், ஜாப்பனீஸ் போன்றவற்றை கற்பதன் மூலம் நல்ல வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பைப் பெற முடியும்.
மொழிபெயர்ப்பு, பிறநாட்டினர் பேசுவதை தாய்மொழி அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உரையாற்றுவது, பிறநாட்டு மொழிகளை கற்பித்தல் என இந்த துறைக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதித்துள்ள நிலையில், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்வதற்கான ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக் கொள்வதன் மூலம் என்னென்ன வேலைவாய்ப்புகளைப் பெற முடியும் என்பதை இனி பார்க்கலாம்...
ஒரு வெளிநாட்டு மொழியில் சிறப்பான தேர்ச்சி பெற்றவர், அதனை பயிற்றுவிப்பராகவோ, தொழில்நுட்ப ரீதியில் மொழி பெயர்ப்பவராகவோ, மொழி பெயர்த்து உரையாற்றுபவராகவோ, பிறநாட்டு தூதர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு உதவியாளராகவோ பணியாற்ற முடியும். இதுமட்டுமின்றி பல்வேறு புத்தக பதிப்பகங்கள் தங்களுக்கு தேவையான வெளிநாட்டு நூல்களை மொழிபெயர்த்துத் தர உள்நாட்டு மொழிபெயர்ப்பாளர்களையே நாடுகின்றன.
வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள், அமைப்புகளிலும், மொழி அறிந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பதிப்பகத்துறை, ஊடகங்கள், வங்கிகள், மார்க்கெட்டிங், பப்ளிக் ரிலேஷன் போன்ற துறைகளிலும், பிற மொழி அறிந்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. சர்வதேச அமைப்புகளான UNO, UNICEFF, Indian National Scientific Documentation centre, International Trade Organisation போன்றவற்றில் மொழி பெயர்ப்பாளர்களுக்கு நிரந்தர பணி வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.
இதுமட்டுமின்றி வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் பேராசிரியராகப் பணியாற்றவும் வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டுத் தூதரகங்கள், பன்னாட்டு விமான நிறுவனங்கள், ஓட்டல் துறை, ஏற்றுமதி நிறுவனங்கள் ஆகியவற்றிலும், பிறநாட்ட்டு மொழிகளைக் கற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.
எங்கு படிக்கலாம்: வெளிநாட்டு மொழிகளை கற்பிக்கும் ஏராளமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. இவற்றில், பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் சான்றிதழ் என 3 விதமாக இந்தக் கல்வி கற்பிக்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் பல்வேறு மொழிகளை கற்பிக்கும் ஏராளமான கல்லூரிகள் இருக்கின்றன. டெல்லி பலகலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் ஏராளமான வெளிநாட்டு மொழிகளை பயிற்றுவித்து வருகிறது.
தூதரகங்களும் அதிகம் என்பதால், வெளிநாட்டு மொழிகளை கற்பதற்கு ஏற்ற இடமாக டெல்லி திகழ்கிறது. தமிழகத்தில் அண்ணாமலை பலகலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், காந்திகிராம் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், புதுச்சேரியில் உள்ள பல்கலைக்கழகம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் பல்வேறு மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
