குழந்தைகளின் கல்வியை நிர்ணயிப்பது பெற்றோரின் கல்வியே
குழந்தைகளின் கல்வியை நிர்ணயிப்பது பெற்றோரின் கல்வியே
செப் 05, 2009 12:00 AM
செப் 05, 2009 12:00 AM
குழந்தைகளின் கல்விக்கும் அவர்களுடைய பெற்றோரின் கல்விக்குமுள்ள தொடர்பு குறித்த பல்வேறு ஆய்வுகளை அமெரிக்கக் கல்வியாளர்கள் சிலர் செய்து வருகின்றனர். இவற்றுள் மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உளவியல் வல்லுனரான பமீலா டேவிஸ் கீன் என்பவரது ஆய்வானது சில முக்கியமான தகவல்களைக் கூறுவதாக அமைந்துள்ளது.
உயர்கல்வி நிலையை எட்டியபின் மாணவர்களின் மொழித்திறன் மற்றும் கல்வித் தேர்ச்சிக்கு அவர்களுடைய பெற்றோரின் கல்வியானது மிக முக்கியமான காரணியாக உள்ளது. எந்த அளவுக்கு பெற்றோரின் கல்வியறிவு மேம்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு அது குழந்தைகளின் மதிப்பெண்களை தீர்மானிப்பதாக அறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக பெற்றோருடைய வருமானம், திருமண நிலை போன்ற அம்சங்களை முடிந்த அளவு தவிர்த்த ஆய்வாக இது மேற்கொள்ளப்பட்டது. உயர்கல்வியை மேற்கொள்வதில், அதிகமாகப் படித்த பெற்றோருடைய குழந்தைகளே நல்ல தேர்ச்சி பெறுவது கண் கூடாக அறியப்பட்டுள்ளது. உயர்கல்வி பெறும்போது அதிகமாகப் படித்த பெற்றோரின் குழந்தைகளே நல்ல தேர்ச்சி பெறுவது கண் கூடாக அறியப்பட்டுள்ளது.
ஒரு குழந்தையின் 8 வயதில் துவங்கி அது 48 வயது மனிதராக உருவாகும் வரையில் அதன் பெற்றோரின் கல்விக்கும் அதன் கல்விக்கும் தொடர்பு உண்டா என்பது தான் ஆய்வின் மையக் கருத்தாகக் கொள்ளப்பட்டது. இதே போல 3 வயதுடைய குழந்தையின் மொழித்திறனும் பள்ளிக்குச் செல்வதில் உள்ள தயார் நிலையும் அந்தக் குழந்தையுடைய தாயின் நடவடிக்கைகளை ஒட்டியே ஆராயப்பட்டன. உயர் பள்ளிப் படிப்பைத் தாண்டிய பெற்றோரின் குழந்தைகளே இந்த ஆய்வுகளிலும் சிறந்து விளங்கியுள்ளனர். இந்த ஆய்வின் பயனாக பெற்றோரின் வருமானத்தை விட அவர்களுடைய கல்வித் தகுதியே குழந்தைகளின் கல்வி குறித்த வெற்றிக்கு அடிப்படைக் காரணமாக இருப்பதும்அறியப்பட்டது.
நல்ல கல்வியறிவு பெற்ற பெற்றோரே தங்களுடைய குழந்தைகளிடம் படிப்பிலும் வாசிப்பதிலும் அதிக அக்கறை எடுத்து நேரம் செலவிட முடிவதால் அவர்களுடைய மொழித் திறன் மேம்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. கணவன், மனைவி என்ற இருவரும் வேலைக்குச் செல்லும் இந்த நாட்களில் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்பட்ட சூழலை வீடுகளில் நடைமுறைப்படுத்தவே பெற்றோர் விரும்புகின்றனர். வீடுகளில் குறித்த நேர உணவுப் பழக்கம், தூங்கும் நேரம் போன்றவை இன்றைய சூழலில் கட்டாயம் நெறிப்படுத்த வேண்டிய பழக்க வழக்கங்களாக மாறியுள்ளன. இதனால் குழந்தைகளுக்கு இலகுத் தன்மை கொண்ட கால அவகாசமே இல்லை என்றாகி விட்டது. போதிய ஓய்வும் கிடைப்பதில்லை.
இந்த ரீதியிலும் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டன. குழந்தைகளை இயந்திரமயமாக மாற்றுவது தவறு என்று கூறப்பட்டாலும் கட்டுப்பாடற்ற நிலையில் குழந்தைகள் ‘டிவி’ பார்ப்பது, வீடீயோ கேம் விளையாடுவது போன்ற பழக்கங்களுக்கே தள்ளப்படுகின்றனர். இயற்கையை ரசிப்பது, பிறருடன் விளையாடுவது, சிந்திப்பது போன்ற நல்ல அம்சங்களில் கவனம் செலுத்தப்படுவதில்லை. இதனால் அவர்களுடைய படிப்பும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் எனவே கட்டுப்படுத்தப்பட்ட முறையான வாழ்க்கை முறையே அவர்களுக்கு நல்லது என்றும் இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.
