கலவை சாதம் மற்றும் முட்டை மசாலா உணவுகள் வழங்குவது குறித்த பயிற்சி வகுப்பு
கலவை சாதம் மற்றும் முட்டை மசாலா உணவுகள் வழங்குவது குறித்த பயிற்சி வகுப்பு
UPDATED : செப் 03, 2014 12:00 AM
ADDED : செப் 03, 2014 12:28 PM
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அரசுப் பள்ளி சத்துணவு மையங்களில், கலவை சாதம் மற்றும் முட்டை மசாலா உணவுகள் வழங்குவது குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.
மாணவர்கள் ஆரோக்கியம் பெற, தமிழக அரசால் அரசுப்பள்ளிகளில் கலவை சாதம் மற்றும் முட்டை மசாலா உணவு வகைகள் வழங்கப்படுகிறது. இந்த உணவு வழங்குவது குறித்த விளக்க பயிற்சி வகுப்பு மடத்துக்குளம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடந்தது. பி.டி.ஓ., மணிவண்ணன் தலைமை வகித்தார். ஆதித்யா இன்டேன் நிறுவனத்தினர் காஸ் சிலண்டர் கையாளும் முறை குறித்த செயல்விளக்கம் வழங்கினர். இதில், ஒன்றியப்பள்ளிகளில் பணியாற்றும் சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்றனர்.
பி.டி.ஓ., கூறியதாவது: முதல் மற்றும் மூன்றாவது வாரநாட்களில் திங்கள்கிழமையில் வெஜிடபிள் பிரியாணியுடன் மிளகுமுட்டை, செவ்வாய் கொண்டைகடலை புலவுடன், நெய்தக்காளி மசாலா முட்டை, புதன் தக்காளி சாதத்துடன், மிளகுமுட்டை, வியாழன் சாம்பார் சாதம், வேக வைத்த முட்டை, வெள்ளி கறிவேப்பிலை அல்லது கீரைசாதத்துடன், மசாலா முட்டை மற்றும் வறுத்த உருளைகிழங்கும் வழங்கப்படும்.
இரண்டு மற்றும் நான்காவது வார நாட்களில் திங்களன்று சாம்பார் சாதம், வெங்காய தக்காளி முட்டை, செவ்வாய் சோயா காய்கறி சாதத்துடன் பெப்பர் முட்டை, புதன் புளிசாதத்துடன் தக்காளி மசாலா முட்டை, வியாழன் எலுமிச்சை சாதத்துடன் சுண்டல் தக்காளி முட்டை, வெள்ளி சாம்பார் சாதம் வேகவைத்த முட்டை, வறுத்த உருளைக்கிழங்கும், பொங்கலை முன்னிட்டு இரண்டு நாட்கள் சர்க்கரை பொங்கலும் அட்டவணையின்படி கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கி கல்வியாண்டு (ஏப்ரல் 2015 ) நிறைவுவரை வரை அரசுபள்ளிகளில் வழங்கப்படும்.
இந்த அட்டவணையின்படி வழங்கப்படும் உணவுகளில், தரம் குறைந்தோ, அளவு குறைவாகவோ வழங்கப்பட்டாலும், முறைகேடுகள் நடந்தாலும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த உணவு வகை வழங்குவது குறித்து பொதுமக்களும், பெற்றோர்களும் கண்காணித்து, குறைகள் இருந்தால் ஒன்றிய அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கலாம்.
