சிறுபான்மை அரசு உதவி பெறும் பள்ளி உரிமை மீட்பு குழு இயக்கம்
சிறுபான்மை அரசு உதவி பெறும் பள்ளி உரிமை மீட்பு குழு இயக்கம்
UPDATED : நவ 02, 2024 12:00 AM
ADDED : நவ 02, 2024 10:34 AM
விழுப்புரம்:
விழுப்புரத்தில் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு குழு சார்பில், கையெழுத்து இயக்கம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன், மாநில துணை தலைவர் கிருஷ்ணாபாய் தலைமையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த கையெழுத்து இயக்கத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் 7.5 சதவீதம் உயர் கல்வி இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்த வேண்டும்.
உதவி பெறும் பள்ளி மாணவர் நலன் கருதி, ஆங்கில வழி இணை பிரிவு மாணவர்களையும் கணக்கில் எடுத்து பணியிட நிர்ணயம் செய்வதோடு, அரசு அனுமதித்த காலிப் பணியிடங்களில் விதிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தொடர்ந்து, கூட்டமைப்பின் சார்பில் பெறப்பட்ட கையெழுத்து பிரதி களை, கலெக்டரிடம் வழங்கினர். அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.