தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோயால் பாதிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் மாணவியர்
தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோயால் பாதிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய வேளாண் மாணவியர்
UPDATED : ஜன 24, 2026 04:45 PM
ADDED : ஜன 24, 2026 04:46 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் வேளாண் பல்கலை மாணவியர், தென்னையை தாக்கும் தஞ்சாவூர் வாடல் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை வேளாண் பல்கலை தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவியர், பல்லடம் வட்டாரத்தில் ஊரக தோட்டக்கலை அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பலபயிர் சாகுபடி
அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி அருகே உள்ள திருவள்ளுவன் சத்குரு சன்னதி இயற்கை பண்ணையை பார்வையிட்டனர்.
துவக்கத்தில், தென்னை ஒரு பயிர் சாகுபடியில் ஏற்பட்ட நஷ்டத்தை தொடர்ந்து, பல தர பயிர் முறைக்கு மாறியது, இயற்கை உள்ளீடுகள், பண்ணை கழிவுகளை பயன்படுத்தி மண் கரிம கார்பன் அளவை குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்தியது குறித்து விளக்கப்பட்டது.
தற்போது, ஜாதிக்காய், மஞ்சள், மிளகு, முருங்கை உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மதிப்பு கூட்டுதல், விவசாயிகளிடம் இருந்து நேரடி நுகர்வோர் விற்பனை குறித்து தெரிவிக்கப்பட்டது.
வாடல் நோய்
மேலும், தென்னை விவசாயிகளிடம் தஞ்சாவூர் வாடல் எனும் அடித்தண்டு சாறு வடிதல் நோய் குறித்து வேளாண் மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாடல் நோய், பூஞ்சை வாயிலாக ஏற்படுகிறது. இந்த பூஞ்சை தென்னை மரத்தின் வேர்கள் வழியாக உட்புகுந்து தண்டின் அடிப்பகுதியை அழிக்கிறது.
பொள்ளாச்சி பகுதியில் அதிகமாக காணப்படும் அதிக நீர்பாசனம், நீர்தேக்கம், கனமான மண் ஆகியவை இந்நோய் பரவ ஏற்ற சூழ்நிலையை உருவாக்குகின்றன. கீழ் பகுதி இலைகள் மஞ்சளாக மாறுதல், குருத்து இலை சிறியதாக வளர்தல், காய்கள் உதிர்தல், தண்டின் அடிப்பகுதியில் வெள்ளை அல்லது பழுப்பு நிற பூஞ்சை வளர்ச்சி அறிகுறிகளாகும். இறுதியில் மரம் முழுவதும் வாடி மடிந்து விடும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது அவசியம் என விளக்கப்பட்டது.
மேலாண்மை
இந்நோய்க்கு முழுமையான மருந்து இல்லாவிட்டாலும், ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் வாயிலாக கட்டுப்படுத்த முடியும். தென்னை தோட்டங்களில் நீர் தேக்கம் ஏற்படாதவாறு வடிகால் வசதி ஏற்படுத்தி, பாதிக்கப்பட்ட மரங்களை வேருடன் வெட்டி அகற்ற வேண்டும்.
ஒரு மரத்துக்கு, 5 - 10 கிலோ நன்கு மக்கிய தொழுஉரம் இடுதல், டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் பசுடோமோனாஸ் போன்ற உயிர் நுண்ணுயிர்கள் மற்றும் வேப்பம்புண்ணாக்கு மண்ணில் இட வேண்டும்.
தென்னை விவசாயம், நீண்ட கால முதலீடு ஆகும். ஆகவே ஒரு மரம் பாதிக்கப்பட்டாலும் அலட்சியம் காட்டாமல் அகற்றிட வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டது.

