மாணவர்கள் குரலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்: மவுனம் கலைத்தார் ராகுல்
மாணவர்கள் குரலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்: மவுனம் கலைத்தார் ராகுல்
UPDATED : ஆக 07, 2026 10:10 AM
ADDED : ஆக 07, 2026 10:11 AM
புதுடில்லி:
ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் போராட்டத்தில் மவுனத்தை கலைத்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், “மாணவர்களின் குரலுக்கு அரசுகள் செவி சாய்க்க வேண்டும்,” எனத் தெரிவித்து உள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அம்மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிற பணி நியமனத்திற்கு நடந்த தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி ஜூலை 25ம் தேதி முதல் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா அரங்கத்தில் இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.
டில்லியில் நடந்த மாணவர்கள் போராட்டம் குறித்து இன்று வரை மத்திய அரசை விமர்சித்து வந்த காங்கிரஸ் எம்.பி., ராகுல், கூட்டணி கட்சி ஆளும் மாநிலத்தில் நடக்கும் போராட்டம் குறித்து எதுவும் பேசாமல் மவுனம் காத்து வந்தார். மாணவர்கள் போராட்டத்தில் ராகுல் இரட்டை வேடம் போடுவதாக பா.ஜ., கண்டனம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுடன் ராகுல், சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடினார். அப்போது ஒருவர், ஜார்க்கண்டில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராகுல் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
கல்வி அமைப்புக்கு எதிராக நாட்டில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராஜஸ்தானின் கோடா, உத்தரகாண்டின் டேராடூனில் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லி உள்ளேன். அலகாபாத்திலும் சொல்வேன். நமது கல்வி அமைப்பு சீர்குலைந்துள்ளது. கட்டுப்படியாகாத நிலையிலும், அடக்குமுறையானதாகவும் உள்ளது.
மத்திய அரசாக இருந்தாலும் ஜார்க்கண்ட் அல்லது காங்கிரஸ் ஆட்சி செய்யும் அரசாக இருந்தாலும், மாணவர்கள் குரலுக்கு செவி சாய்த்து, கல்வி அமைப்பில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
