சங்கரா கலை அறிவியல் கல்லுாரியுடன் சிடாக் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சங்கரா கலை அறிவியல் கல்லுாரியுடன் சிடாக் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
UPDATED : பிப் 17, 2026 02:03 PM
ADDED : பிப் 17, 2026 02:05 PM
ஏனாத்துார்:
மாணவ, மாணவியரின் திறன் மேம்பாட்டை மேம்படுத்தும் வகையில், காஞ்சி சங்கரா கல்லுாரி, தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான 'சிடாக்' நிறுவனம் இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியரின் திறன் மேம்பாட்டை மேம்படுத்தும் வகையில், பல முயற்சிகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான 'சிடாக்' நிறுவனத்துடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் மூலம், சூப்பர் கம்ப்யூட்டிங், ஏ.ஐ., சைபர் பாதுகாப்பு மற்றும் மென்பொருள் தீர்வுகள் மற்றும் சமூக ஊடக சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் மாணவ, மாணவியர் தங்கள் திறமைகளை வளர்ப்பதற்கும், அதில், வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவி செய்யும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக சான்றிதழுடன் கூடிய படிப்புகளை கல்லுாரியிலேயே படிப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் தெரிவித்தார். முன்னதாக 'சிடாக்' நிறுவனத்தின் சார்பில், நடராஜன், மகேஸ்வரி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

