பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி
UPDATED : ஏப் 27, 2024 12:00 AM
ADDED : ஏப் 27, 2024 10:31 AM

சென்னை:
பாரீஸ் ஒலிம்பிக் பாய்மர படகு போட்டியில் தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார்.இவருக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
ஆசியான் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் நடக்கிறது. இதில் பாய்மர படகு போட்டியில் நேத்ரா குமணன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26-ம் தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க நேத்ரா குமணன் தகுதி பெற்றதாக, தமிழக அமைச்சர் உதயநிதி தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் அவருக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். நேத்ரா குமணன் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாரீஸ் ஒலிம்பிக்கிலும் தகுதி பெற்றதன் மூலம் இரு ஒலிம்பிக் போட்டிகளில் தகுதி பெற்ற ஒரே வீராங்கனை என்ற பெருமை பெற்றுள்ளார்.
நேத்ரா குமணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மத்திய அரசின் டார்கெட் ஒலிம்பிக் போடியம் ஸ்கீம் என்ற திட்டத்தின் மூலம் திறமையை வளர்த்துக்கொண்டவர், அவருக்கு ஒட்டு மொத்த நாட்டின் சார்பாக வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.