UPDATED : ஜன 25, 2013 12:00 AM
ADDED : ஜன 25, 2013 07:54 AM
தற்போதைய நிலை குறித்து போக்குவரத்துத்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுரை ஐகோர்ட் கிளையில், தினமலர் நாளிதழில் வெளியான படம் குறித்து, நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், டி.ராஜா ஆகியோரிடம் வக்கீல் என்.எஸ்.பொன்னையா குறிப்பிட்டார். அதை ஆதாரமாகக் கொண்டு, பொதுநல வழக்காக, நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "சென்னையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் 4 பேர் பலியாகினர். பத்திரிகை செய்தி அடிப்படையில், இதை தானாக முன்வந்து, சென்னை ஐகோர்ட் முதன்மை பெஞ்ச் விசாரணைக்கு எடுத்தது. படிக்கட்டு பயணத்தை தடுக்க போக்குவரத்து கமிஷனருக்கு உத்தரவிட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத உள்துறைச் செயலர், டி.ஜி.பி., மற்றும் ஐ.ஜி., மீது அவமதிப்பு செய்ததாக கருதி, ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்," என குறிப்பிட்டிருந்தனர்.
நேற்று, நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், கே.ரவிச்சந்திரபாபு முன், மனு விசாரணைக்கு வந்தது. ஜெயச்சந்திரன் எஸ்.பி., தாக்கல் செய்த பதில் மனு: சம்பந்தப்பட்ட பேருந்து, ஜனவரி 2ம் தேதி பகல் 3.50 மணிக்கு, வேடசந்தூரில் இருந்து திண்டுக்கலுக்கு 44 பயணிகளுடன் வந்தது. மாலை 4.40 மணிக்கு காட்டாஸ்பத்திரி ஸ்டாப்பில் நின்றது. அங்கு, 100 பயணிகள் பேருந்தில் ஏறினர்.
கண்டக்டர் சுப்பிரமணியன், டிரைவர் முருகானந்தம் ஆகியோர், "படிக்கட்டில் நிற்பவர்கள் உள்ளே வரவேண்டும். இல்லை எனில், போலீஸ் ஸ்டேஷனுக்கு பேருந்தை செலுத்துவோம்" என, எச்சரித்துள்ளனர். ஜனவரி 8ல், ஐகோர்ட் கோர்ட் உத்தரவின் படி, டி.ஜி.பி., அனுப்பிய சுற்றறிக்கையில், "படியில் பயணம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். படியில் தொங்கியவாறு பயணம் செய்வதை கண்டால், அந்த பேருந்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
பயணிகளை, நெரிசல் இல்லாத பேருநதில் அனுப்ப வேண்டும். டிரைவர், கண்டக்டர் ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். படியில் தொங்கி பயணிக்கும் மாணவர்கள் பற்றி பெற்றோர், பள்ளி முதல்வர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மீண்டும் அதே தவறை செய்தால், அவர்களை பள்ளியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,&'&' என, குறிப்பிட்டுள்ளார்.
படிக்கட்டு பயணம், அதிக வேகம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை முதன்மைச் செயலர், ஜனவரி 22 ல், டி.ஜி.பி., கலெக்டர்கள், எஸ்.பி.,கள், கமிஷனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். படிக்கட்டுகளில் பயணம் செய்ததாக மாணவர்கள் 75 பேர் மற்றும் அதை தடுக்காத டிரைவர், கண்டக்டர்கள் 112 பேர், பயணிகள் 331 பேர் என, மொத்தம் 518 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், 51 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என, குறிப்பிட்டார்.
மதுரை போக்குவரத்து துணை கமிஷனர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பதில் மனுவில், "மதுரையில் 300 தாழ்தள பஸ்கள், தானியங்கி கதவுகளுடன் இயக்கப்படுகின்றன. மோட்டார் வாகன சட்டப்படி படிக்கட்டில் பயணம் செய்து முதல்முறை பிடிபட்டால் 100 ரூபாய், அடுத்த முறையும் தவறு செய்தால் 300 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுவரை 37 வழக்குகள் பதிவு செய்து, அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதபட்டுள்ளது," என, குறிப்பிட்டார்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், "படிக்கட்டு பயணத்தை தடுக்க, முக்கிய சந்திப்புகளில் தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்,&'&' என்றார். நீதிபதிகள் உத்தரவில், "தற்போதைய நிலை குறித்து, போக்குவரத்து செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்," என்றனர். விசாரணை, 2 மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.