UPDATED : மே 10, 2024 12:00 AM
ADDED : மே 10, 2024 10:58 AM
சிகாகோ:
அமெரிக்காவில் படித்து வந்த ஹைதராபாத்தை சேர்ந்த மாணவர் கடந்த 2ம் தேதி முதல் காணவில்லை. இதனால், அவரது பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். அந்த மாணவரை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இந்தியத் தூதரக அலுவலகம் ஈடுபட்டு உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ரூபேஷ் சந்திரா சின்டாகிண்டி (25). அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள கான்கார்டியோ பல்கலையில் படித்து வந்தார். இவர் கடந்த 2ம் தேதி, அவர் மொபைல்போன் வாயிலாக தந்தையுடன் பேசி உள்ளார். அப்போது, குறிப்பிட்ட பணியில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனையடுத்து ரூபேஷ் சந்திராவின் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். மகனை கண்டுபிடித்து தரும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே ரூபேஷ் சந்திரா மாயமானது குறித்த புகாரை விசாரித்து வரும் சிகாகோ போலீசார், அவர் குறித்து தகவல் இருந்தால் தெரிவிக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிகாகோவில் உள்ள இந்திய தூதரக அலுவலக அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், ரூபேஷ் சந்திரா மாயமான விவகாரம் கவலை அளிக்கிறது. ரூபேஷ் கண்டுபிடிக்கப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது எனக்கூறியுள்ளது.