UPDATED : ஜன 13, 2026 08:46 PM
ADDED : ஜன 13, 2026 08:50 PM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை ஊராட்சியில் ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லுாரியில் ஜன., 9, 10 மற்றும் ஜன., 11 ஆகிய மூன்று நாட்களில் மாநில அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டிகள் நடந்தது.
முதல் மற்றும் கால் இறுதி சுற்று மற்றும் இறுதி சுற்று ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிறைவு விழாவில் முதன்மை விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
சட்டக் கல்லுாரி இயக்குனர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். அரசு சட்டக் கல்லுாரி முதல்வர் ஜேம்ஸ் ஜெயபால் வரவேற்றார். கல்லுாரி வளாகத்தில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன.
நீதிபதி கே.கே.ராம கிருஷ்ணன் பேசுகையில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கார்ப்பரேட் சட்டத்தில் வல்லுனர்களாக விளங்க வேண்டும்.
இசைவு தீர்ப்பாயத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், இது போன்ற மாதிரி நீதிமன்ற போட்டிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஊக்குவிப்பு பெறுவதால் அனைவரும் பயன்படுத்தி சர்வதேச அளவிலான போட்டியிலும் பங்கேற்க வேண்டும் என்றார்.
அதனை தொடர்ந்து முதலிடம் பிடித்த சென்னை புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி மாணவர்களுக்கும், இரண்டாமிடம் பிடித்த காரைக்குடி அரசு சட்டக் கல்லுாரி மாணவர்களுக்கும் பரிசுகள், சான்றிதழ், கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மாநில மாதிரி நீதிமன்றக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயகவுரி மற்றும் நீதிமன்ற குழு கூடுதல் ஒருங்கிணைப்பாளர் ராமபிரான், ரஞ்சித் சிங் உட்பட நீதிமன்ற குழு உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

