UPDATED : ஏப் 30, 2026 05:08 PM
ADDED : ஏப் 30, 2026 05:09 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், 2022- 26ம் ஆண்டு மாணவ, மாணவியருக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது. என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் மற்றும் தாளாளர் ஹரிஹரசுதனின் வாழ்த்து செய்தியை துணை முதல்வர் முனைவர் செந்தில்குமார் மாணவர்களிடம் தெரிவித்தார்.
சென்னை நம்ம பூமி நிறுவனர் அருள்பிரியா, தனது வளர்ச்சியில் மூத்த மாணவர்களின் வழிகாட்டலும், நேர்முகத் தேர்வுகளில் அவர்கள் அளித்த ஆதரவும் முக்கிய பங்கு வகித்ததாக கூறினார். மேலும், கற்றலை ஒருபோதும் நிறுத்தாதீர்கள், அடிப்படை அறிவை வலுப்படுத்துங்கள், வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அணுகுங்கள், என அறிவுறுத்தினார்.
கோவை 'திங்க்சால்வ் டெக்னாலஜிஸ் பைவர்ட்' நிறுவனர் விக்ரம் ஆறுச்சாமி, பொறியாளரின் அடையாளம் பட்டப்படிப்பால் மட்டுமல்ல; சிந்தனையுடன் எடுக்கப்படும் முடிவுகளால் உருவாகும் தனித்துவம் என, தெரிவித்தார்.
இறுதி ஆண்டு மாணவர்கள், கல்லூரி வாழ்க்கையின் இனிய நினைவுகளை பகிர்ந்து, நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்தனர். கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி, மாணவர் வாழ்க்கையில், கல்வியுடன் நல்ல தொடர்புகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு முக்கியம், என, வலியுறுத்தினார். மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலர் சுப்ரமணியன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

