இளநிலை உதவியாளர்கள் நியமனம்: பிப்ரவரி 2ல் கலந்தாய்வு
இளநிலை உதவியாளர்கள் நியமனம்: பிப்ரவரி 2ல் கலந்தாய்வு
UPDATED : பிப் 01, 2013 12:00 AM
ADDED : பிப் 01, 2013 07:39 AM
கடந்த, 2007-08 முதல், 12-13ம் ஆண்டு வரை, குரூப்-4 நிலையில், பள்ளி கல்வித்துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட, 554 இளநிலை உதவியாளர்களை, சமீபத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு செய்து, தேர்வர்களின் பட்டியலை கல்வித்துறையிடம் ஒப்படைத்தது.
இதைத் தொடர்ந்து, அவர்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை, அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில், "ஆன்-லைன்" வழியில் நடக்கிறது.
தேர்வு பெற்றவர்கள் அனைவரும், தங்களது இருப்பிட முகவரி அமைந்துள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு, நாளை காலை, 9:00 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு காலையிலும், மாவட்டம் விட்டு, வேறு மாவட்டத்தில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு, பிற்பகலிலும் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி ஒதுக்கீட்டு ஆணைகளை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், பணி நியமன ஆணைகளை, மாவட்ட கல்வி அலுவலர்களும் வழங்குவர். ஞாயிற்றுக்கிழமை, மருத்துவ சான்றிதழை பெற்று, திங்கள்கிழமை, அனைவரும் பணியில் சேரலாம் என, கல்வித்துறை தெரிவித்தது.
