UPDATED : டிச 20, 2023 12:00 AM
ADDED : டிச 20, 2023 09:48 AM
சூணாம்பேடு:
சூணாம்பேடு அருகே வில்லிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரின் மகன் யுகேஷ்குமார், 14. இவர், வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று, அரையாண்டு தேர்வு எழுதிவிட்டு, பள்ளியில் இரண்டாம் தளத்தில் காலியாக இருந்த வகுப்பறை ஒன்றில், கடைசி பெஞ்சில் படுத்து உறங்கியுள்ளார். பள்ளி முடிந்து, அனைத்து மாணவர்களும் சென்றதும், வழக்கம் போல, அலுவலக உதவியாளர் அனைத்து வகுப்பறைகளையும் பூட்டிவிட்டு சென்றுள்ளார்.மாலை 6:00 மணிக்கு, யுகேஷ்குமார் துாக்கம் கலைந்து எழுந்து பார்த்தபோது, வகுப்பறை பூட்டப்பட்டு இருந்ததால், பயந்துபோய் கூச்சலிட்டுள்ளார். பின், பள்ளி அருகே உணவகத்தில் இருந்தவர்கள், வகுப்பறையில் இருந்து அலறல் சத்தம் வருவதை கேட்டு, வகுப்பறையை திறந்து மாணவனை மீட்டு, அனுப்பி வைத்தனர்.
