UPDATED : செப் 01, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தமிழகம் முழுவதும் கடும் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், அறிவிக்கப்பட்ட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மின் பற்றாக்குறையை போக்க மின்வாரியத்துறை பல நடவடிக்கை எடுத்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
இதைக் கருத்தில் கொண்டு, மின்பற்றாக்குறையை சரிசெய்து உற்பத்தியை அதிகப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட கோவை அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.
இப்பல்கலையின் கட்டுப்பாட்டில் எட்டு மாவட்டங்களில் 103 இன்ஜி., கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் பங்கேற்கவுள்ளன. சூரிய ஒளி, காற்றாலை, அணு ஆற்றல், ஈனுலை, அனல் மின் ஆகியவற்றில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி, மின் உற்பத்தியை பெருக்குவது பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்த ஆராய்ச்சித் திட்டத்தில் பல்வேறு கல்லூரிகளை ஒன்றிணைத்து ஐந்து குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இக்குழுக்களுக்கு, பல்கலை நிதியுதவி அளிக்கும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்படும் என்றார்.

