21 குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி பாதிப்பு; கோவையில் தனியார் பள்ளிக்கு விடுமுறை
21 குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி பாதிப்பு; கோவையில் தனியார் பள்ளிக்கு விடுமுறை
UPDATED : மார் 08, 2025 12:00 AM
ADDED : மார் 08, 2025 11:11 AM

கோவை:
21 குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி பாதிப்பு கண்டறியப்பட்டதால் கோவையில் பிரபல தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை பீளமேட்டில் செயல்படும் பிஎஸ்ஜி மெட்ரிக் பள்ளியில் 21 குழந்தைகளுக்கு இன்று பொன்னுக்கு வீங்கி பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அறிவுரைப்படி பள்ளிக்கு மார்ச் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
நமது பள்ளியில் 21 மாணவர்களுக்கு பொன்னுக்கு வீங்கி பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஆகவே மார்ச் 8 முதல் மார்ச் 12 வரை தற்காலிகமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி, மாவட்ட கல்வித்துறை அதிகாரியின் அறிவுறுத்தலின்படி, உங்கள் குழந்தைகளின் நலன் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் குழந்தைகளில் யாருக்கேனும் பொன்னுக்கு வீங்கி பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.
உடனடியாக மருத்துவர்கள் ஆலோசனை பெறவும். முழுமையாக குணம் பெறும் வரை வீட்டிலேயே வைத்திருக்கவும். பள்ளியின் அடுத்த வேலை நாள் மார்ச் 13ம் தேதி.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.