UPDATED : மே 14, 2025 12:00 AM
ADDED : மே 14, 2025 08:40 AM
தஞ்சாவூர்:
இந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
தஞ்சாவூரில், தனியார் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் கூறியதாவது:
அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகளில், ஒட்டுமொத்த விண்ணப்பங்களின் அடிப்படையில் ஆண்டு தோறும் பெற்றோர், ஆசிரியர்கள், கல்லுாரி முதல்வர்கள் வேண்டுகோள் படி, கூடுதலாக 5- 10 சதவீதம் மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.
கடந்த ஆண்டை காட்டிலும், இந்தாண்டு கூடுதலாக 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 64 கல்லுாரிகளில், இரண்டு சுழற்சி முறை பின்பற்றப்பட உள்ளன.
மேலும், தொழில்நுட்ப இயக்ககத்திலும், உயர் கல்வித்துறையிலும் தனித்தனியாக, 11 பாடப்பிரிவுகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இடைநிற்றல் கூடாது என்ற அடிப்படையில், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.