ஆதார் அப்டேட்: குவியும் பெற்றோர் தலைமை தபால் நிலையம் திணறல்
ஆதார் அப்டேட்: குவியும் பெற்றோர் தலைமை தபால் நிலையம் திணறல்
UPDATED : ஜூலை 08, 2024 12:00 AM
ADDED : ஜூலை 08, 2024 09:04 AM
திருப்பூர்:
தலைமை தபால் அலுவலகத்தில் ஆதார் அப்டேட் செய்ய தங்கள் குழந்கைளுடன் பெற்றோர், வார இறுதி நாட்களில் வருவதால், கூட்டம் அதிகரிக்கிறது. மாற்று ஏற்பாடுகளை கல்வித்துறை செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு ஆறு வயது கடந்தவுடன், ஆதார் அப்டேட் செய்யப்படுகிறது. இதற்காக, பெரும்பாலானோர் தபால் நிலையத்தை நாடி செல்கின்றனர். இவ்வாறு அப்டேட் செய்து, வங்கிக்கணக்கு துவங்கினால் தான் நலத்திட்ட உதவிகள் வரவு வைக்கப்படும். இதனால், பள்ளி விடுமுறை நாளான சனிக்கிழமையில், திருப்பூர் தலைமை தபால் அலுவலகம் முன் கூட்டம் நிறைந்து விடுகிறது.
அலுவலகம் திறக்கும் முன்னரே, நீண்ட வரிசையில், காத்திருக்கின்றனர். மதியத்துக்கு பின்னரும் கூட்டம் காணப்படுகிறது; பெற்றோர், மாணவ, மாணவியரும் நீண்ட நேரம் காத்திருந்து ஆதார் அப்டேட் செய்கின்றனர்.
தினமும், 50 முதல், 60 டோக்கன் தருவதுடன், மறுநாளே அப்டேட் மெசேஜ் வருவதால், தபால் நிலையத்தை நாடி வருகின்றனர். ஒரு பணியாளர், ஒரு உதவியாளர் உள்ளார். முடிந்தவரை வேகமாக எடுத்து தருகிறோம், தபால் அலுவலர்கள் கூறுகின்றனர்.
பள்ளிகளில் என்னாச்சு?
மாணவ, மாணவியர் சிரமத்தை போக்க, அரசு பள்ளிகளிலேயே ஆதார் வழங்கும் திட்டம் பள்ளி திறக்கும் போது துவங்கப்பட்டது. முதல் ஒரு வாரம் சுறுசுறுப்பாக நடந்த பணிகள் அப்படியே கைவிடப்பட்டது. ஆதார் அப்டேட் செய்யாமல் உள்ள மாணவ, மாணவியரை கண்டறிந்து, ஆதார் வழங்கும் பணியை முழுமையாக மேற்கொள்ளவில்லை.
இதனால், தபால் அலுவலகம் உட்பட பல்வேறு ஆதார் மையங்களில், பிரவுசிங், கம்யூட்டர் சென்டர்களில் மாணவ, மாணவியர் பெற்றோருடன் அலைந்து கொண்டிருப்பதை காண முடிகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் ஆதார் அப்டேட் செய்யாதவர் விபரங்களை வகுப்பாசிரியர் கண்டறிந்து, தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆதார் அலுவலர் பேசி மீண்டும் பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.