UPDATED : நவ 04, 2024 12:00 AM
ADDED : நவ 04, 2024 09:46 AM
கொட்டாம்பட்டி:
சுந்தரராஜபுரத்தில் அங்கன்வாடி மையத்தின் முன் பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் குழந்தைகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி வருகிறது.
எட்டிமங்கலம் ஊராட்சி எ.சுந்தரராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். 2 மாதங்களுக்கு முன் மராமத்து பணியின்போது மையத்தின் முன்பகுதியில் சிமென்ட் தளம் அமைத்து கல் ஊன்றி கம்பி வேலி அமைத்தனர். ஆனால் மழை நீர் மையத்தின் முன்பகுதியில் தேங்கி கழிவுநீராக மாறுகிறது. இதனால் குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து பிரசாத் என்பவர் கூறுகையில், சிமென்ட் தளம் தாழ்வாக அமைத்துள்ளதால் மழை நீர் தேங்குகிறது. மையத்தின் பின்பகுதியில் குப்பை கொட்டும் இடத்தில் இருந்து தண்ணீர் மையத்தின் முன் பகுதியில் தேங்குவதால் கழிவு நீரும் தேங்குகிறது.
மழைநீரில் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. ஊராட்சி நிர்வாகத்திடம் சொன்னால் பெயரளவில் தண்ணீரை வெளியேற்றுகின்றனர். தண்ணீர் நிரந்தரமாக தேங்காதவாறு சிமென்ட் தளத்தை உயர்த்த வேண்டும், என்றார்.
கொட்டாம்பட்டி ஒன்றிய அலுவலக உதவி செயற்பொறியாளர் சரவணன் கூறுகையில், தண்ணீர் தேங்காதவாறு சிமென்ட் தளம் உயர்த்தப்படும் என்றார்.