UPDATED : மார் 10, 2026 02:14 PM
ADDED : மார் 10, 2026 02:16 PM
செங்கல்பட்டு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்கள் சூரியமின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து செங்கை கலெக்டர் மாலதி ஹெலன் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு ஆதிதிராடவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
தற்போது தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சிக்கு 18 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, பொறியியல் படிப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளத்தில் www.tahdco.com விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

