மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஆக 29, 2026 01:29 PM
ADDED : ஆக 29, 2026 01:30 PM
மதுரை:
மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2026 - 27க்கு தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் (நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல்) அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடு கல்வி நிறுவன (நுாறு சதவீத தேர்ச்சி) பள்ளிகளில் நடப்பாண்டில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியர் (புதுப்பித்தல்/ புதியது) திட்டத்தில் (https://scholarships.gov.in) விண்ணப்பிக்கலாம்.
இதில் கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் ஆண்டுக்கு அதிகபட்சம் 9 - 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 75 ஆயிரம், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 1.25 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். 30 சதவீதம் மாணவியருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் , பொருளாதாரத்தில் பின்தங்கியவர் அல்லது சீர்மரபினர் பிரிவை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சம் வரை.
ஆக., 31 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதை தலைமை ஆசிரியர்கள் சரிபார்க்க கடைசி நாள் செப்., 15. புதிய திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 9, 11ம் வகுப்புகளில் பயில்வோர் விண்ணப்ப தேதி இணையத்தில் அறிவிக்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு https://socialjustice.gov.in என்ற முகவரியிலும் அறியலாம் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
