நல்லவர்களுடன் நட்பு கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு டி.எஸ்.பி., அட்வைஸ்
நல்லவர்களுடன் நட்பு கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு டி.எஸ்.பி., அட்வைஸ்
UPDATED : ஜன 26, 2026 12:14 PM
ADDED : ஜன 26, 2026 12:16 PM

மயிலம்: 'நல்ல மாணவர்களுடன் நட்பு கெள்ளுங்கள்' என போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் டி.எஸ்.பி., பேசினார்.
மயிலம் அடுத்த பாதிராப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு திண்டிவனம் டி.எஸ்.பி., பிரகாஷ் தலைமை தாங்கி பேசுகையில், 'மாணவர்கள், தினசரி ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை படிக்க வேண்டும். பின் அதை எழுதிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று எங்களைப் போன்று உயர் அதிகாரிகளாகவும், அரசு பணியாளர்களாகவும் வர முடியும்.
எனவே உங்கள் மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி கல்வியை இளமையில் நன்றாக கற்று வாழ்வில் சிறப்படைய வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்த பின்தான் ஓட்டுநர் லைசன்ஸ் பெற முடியும். ஆனால், ஒரு சில மாணவர்கள் லைசன்ஸ் இல்லாமல் பைக் ஓட்டுகின்றனர். அவ்வாறு நீங்கள் செய்யக் கூடாது.
லைசன்ஸ் பெறுவதற்கு முன் பைக் ஓட்டினால் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். படிக்கின்ற காலத்தில் நல்ல மாணவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அது கூட உங்கள் வாழ்க்கையை மேன்மை அடையச் செய்யும்' என்றார். நிகழ்ச்சியில், பேசியவர்கள் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் அதனை ஒழிப்பது குறித்து விளக்கினர்.
பள்ளி தலைமை ஆசிரியர் குமாரவேல், துணை தலைமை ஆசிரியர் ராமசாமி, முதுகலை தமிழாசிரியர் பஞ்சாட்சரம் ஆசிரியர் நவீன், சமூக ஆர்வலர் ரவி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தமிழரசி நன்றி கூறினார்.

