மாணவர் திறனை பரிசோதித்த 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு
மாணவர் திறனை பரிசோதித்த 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு
UPDATED : மார் 17, 2026 03:18 PM
ADDED : மார் 17, 2026 03:21 PM
திருப்பூர்:
இது வரை கேட்கப்படாத, அதே நேரம் எளிதில் விடை எழுத முடியும் வகையிலான கேள்வி கேட்கப்பட்டு, பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் மாணவர்கள் திறனை தேர்வுத்துறை பரிசோதித்தது.
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் தேர்வு நேற்று நடந்தது; தேர்வெழுத, 29 ஆயிரத்து, 418 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்ட நிலையில், 28 ஆயிரத்து, 920 பேர் தேர்வெழுதினர்; 501 பேர் தேர்வறைக்கு வரவில்லை. தனித்தேர்வர்களில், 631 பேர் தேர்வெழுதினர்; 54 பேர் தேர்வுக்கு வரவில்லை.
தேர்வு குறித்து மாணவர்கள் கூறியது:
நபிஹா:
ஒரு மதிப்பெண் அனைத்து கேள்விகளும் எளிதாக இருந்தது. போயம், இலக்கண பகுதி கேள்விகள் புதியதாக இருந்தாலும், விடையளிக்க முடிந்தது. முக்கிய வினாக்கள் என எதிர்பார்த்த கேள்விகள் வரவில்லை. நல்ல மதிப்பெண் பெற முடியும்.
தீனா:
போயம், இலக்கண பகுதி வினாக்கள் சற்று யோசித்து விடையளிக்கும் வகையில் இருந்தது. இரண்டு, ஐந்து மதிப்பெண்ணில் புதிய கேள்விகள் நிறைய இருந்தது. ஆங்கிலத்தேர்வு கஷ்டமாக இருந்தது என்று சொல்ல முடியாது; மிகவும் எளிமையாகவும் இல்லை.
சதவீதம் அதிகரிக்கும்!
திருப்பூர், குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் கல்பனா கூறியதாவது:
ஒரு மதிப்பெண் வினாக்கள் ஏற்கனவே பலமுறை கேட்கப்பட்டவை எளிமையாக இருந்திருக்கும். இரண்டு மதிப்பெண் இது வரை கேட்கப்படாத கேள்வியாக இருந்தாலும், எளிதில் விடையெழுத கூடியது தான். 'போயம்', 'பேராகிராப்' நன்றாக படித்த மாணவர் எழுதியிருக்க முடியும். 'கிராமர்' பகுதி எளிமையாக இருந்தது.
தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும். நன்கு படித்த மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
