மருத்துவ சீட் பெயரில் ரூ.59 லட்சம் ஏமாற்றிய காங்., பிரமுகர் கைது
மருத்துவ சீட் பெயரில் ரூ.59 லட்சம் ஏமாற்றிய காங்., பிரமுகர் கைது
UPDATED : நவ 28, 2024 12:00 AM
ADDED : நவ 28, 2024 09:44 AM
சென்னை:
சென்னை கேளம்பாக்கம் அடுத்த படூர், ஓ.எம்.ஆர்., சாலையைச் சேர்ந்தவர் தீபா, 44. இவர், கடந்த செப்டம்பரில், ஆவடி மத்திய குற்றப் பிரிவில் ஒரு புகார் அளித்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
என் மூத்த மகளுக்கு, மருத்துவ சீட் வாங்கி தருவதாக, என் உறவினர் லதா என்பவர் வாயிலாக, அவரது தோழி அனிதா, 48, என்பவர், கடந்த 2019ல் அறிமுகமானார். தமிழக காங்கிரசில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும், ஆல் இந்தியா மெடிக்கல் கவுன்சில் அதிகாரிகளை தெரியும் எனக் கூறிய அனிதா, மருத்துவ சீட் வாங்கித் தருவதாக கூறினார்.
அதை நம்பி அனிதாவுக்கும், அவரது நண்பரான, கோவாவைச் சேர்ந்த முகமது கான் என்பவருக்கும், கடந்த 2019 முதல் பல்வேறு தவணைகளாக, 59 லட்சம் ரூபாய் கொடுத்தேன். பல நாட்களாகியும், மருத்துவ சீட் வாங்கித் தராமல் ஏமாற்றினர். எனவே, அனிதா மீது நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு, புகாரில் கூறியிருந்தார்.
இது குறித்து விசாரித்த, வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார், கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம், சாந்திபுரத்தைச் சேர்ந்த காங்., நிர்வாகி அனிதாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான முகமது கானை தேடி வருகின்றனர்.