UPDATED : மே 04, 2024 12:00 AM
ADDED : மே 04, 2024 11:41 AM

திருப்பூர்:
இந்தியாவுக்கான வர்த்தக வாய்ப்புகள் கணிசமாக உயர்ந்து வருவதால், வர்த்தக வளர்ச்சிக்கான தரக்கட்டுப்பாடு அங்கீகாரம் அவசியமாகியுள்ளது,'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசினார்.
ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் 'கீமா', 60 நாடுகளில், தரக்கட்டுப்பாடு மற்றும் பரிசோதனை கூடங்களை இயக்கி வருகிறது. இந்தியாவில், புதுடில்லி மற்றும் திருப்பூரில் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
கீமா நிறுவனம், ஜவுளி உற்பத்தி நிறுவனத்தின் அனைத்து படிநிலைகளையும் ஆராய்ந்து, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலான, அங்கீகாரச்சான்று வழங்கிறது. இத்தகைய தரச்சான்று பெற்ற நிறுவனங்களுக்கு, ஜவுளி இறக்குமதி செய்யும் நாடுகள், வர்த்தகத்தில் முன்னுரிமை அளித்து சிறப்பிக்கின்றன.
இச்சூழலில், திருப்பூரில், 'கீமா' விற்பனை பிரிவு இயக்குனர் லுாகாஸ் போல்ச்லொபக், ஆய்வக செயல்பாட்டு மேலாளர் பாலாஜி, தொழில் அபிவிருத்தி மேலாளர் ரமணன்பெல்லி ஆகியோர், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் மற்றும் இணை செயலர் குமார் துரைசாமியை சந்தித்தனர்.
அப்போது, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசியதாவது:
இந்தியாவின் ஆயத்த ஆடை உற்பத்தியில், சர்வதேச தரமேம்பாடு மற்றும் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பாவுடனான, வங்கதேசத்தில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், 2027ல் நிறைவு பெறுகிறது; அதன்பின், ஒப்பந்தம் ரத்தாகும் என்று தெரியவந்துள்ளது.
இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான, வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சு முடிந்து, சில மாதங்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலை உருவாகியுள்ளது. சாதகமான இந்தசூழலில், இந்தியாவுக்கான வர்த்தக வாய்ப்புகள் உயர்ந்து வருகின்றன; தரக்கட்டுப்பாடு அங்கீகாரம் அவசியமாகியுள்ளது.
தரக்கட்டுப்பாடு மற்றும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, தரக்கட்டுப்பாடு சான்று பெறுவதற்கு, கீமா போன்ற நிறுவனங்கள் ஒத்துழைப்பும் திருப்பூருக்கு தேவைப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் உதவியாக, பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பரஸ்பரம் உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உறுதுணை!
கீமா நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குனர் லுாகாஸ் போல்ச்லொபெக் பேசுகையில், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களின் அடுத்தகட்ட தேவைகளை, தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்கள். திருப்பூர் நிறுவனங்களின் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கு, உறுதுணையாக இருப்போம். இனிவரும் நாட்களில், ஏற்றுமதி வர்த்தக மேம்பாட்டுக்கான பயிற்சி முகாம் நடத்தவும் விரும்புகிறோம் என்றார்.