10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
UPDATED : பிப் 22, 2026 11:33 AM
ADDED : பிப் 22, 2026 11:36 AM

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் அரசு பொதுத் தேர்வுகளை உரிய விதிமுறைப்படி நடத்திட கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 10 மற்றும் பிளஸ் 2 அரசு பொது தேர்வுகள் குறித்த ஒருங்கிணைப்புகுழு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் அரசு தேர்வுகள் இயக்கத்தின் கால அட்டவணைப்படி இந்த ஆண்டு 10 வகுப்பு தேர்வு வரும் மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வில் 20,264 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 2 முதல் மார்ச் 26ம் தேதி வரை நடக்கிறது. இதில், 16,985 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கான வினாத்தாள்கள் 3 கட்டுக்காப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல்துறை பாதுகாப்புடன் வினாத்தாள்கள் கொண்டு செல்ல வேண்டும். மாணவர்கள் தாமதமின்றி தேர்வு மையத்திற்கு வர வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்கவும், மாணவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, மாவட்டத்தில் பொது தேர்வுகளை உரிய விதிமுறைப்படி நடத்திட அரசு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, சி.இ.ஓ., கார்த்திகா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

