ஜனங்களின் வாழ்வை சொன்ன... கி.ரா.வின் கரிசல் மண் கதைகள்
ஜனங்களின் வாழ்வை சொன்ன... கி.ரா.வின் கரிசல் மண் கதைகள்
UPDATED : பிப் 22, 2026 11:30 AM
ADDED : பிப் 22, 2026 11:33 AM

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர்.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எனும் கி.ரா.வின் 'சிறுகதைகள் தொகுப்பு குறித்து, கவிஞர் வானதி சந்திரசேகர் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஜனங்களின் கதையை, ஜனங்களில் ஒருவராக வாழ்ந்து கதை சொன்னவர் கி.ரா. அவரது மண்வாசனை மணக்கும் எழுத்துக்களில், உயிரோவியமாக உலா வரும் கதை மாந்தர்களும், அவர்கள் பேசும் வட்டார மொழியும், வாசிப்பவர்களை கதை களத்துக்கே அழைத்து சென்றுவிடும்.
சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டுள்ள கி.ரா.வின் 'நிலை நிறுத்தல் கி.ரா., 99 சிறப்புச் சிறுகதைகள்' என்ற தொகுப்பு வாசித்த போது அதை உணர்ந்தேன். இந்நுாலில், சிறந்த 16 சிறுகதைகள் உள்ளன. அதிலிருந்து நான் சில கதைகளை பற்றி மட்டும் என் வாசிப்பு அனுபவத்தை பகிர்கிறேன்.
இதில் உள்ள 'சொந்தச் சீப்பு' என்ற கதையில், கோபாலன் மற்றும் அவரது நண்பர்கள் மூவரை கதை மாந்தர்களாக அறிமுகம் செய்கிறார் கி.ரா. இவர்களில் மற்ற மூவர் வாங்கி வந்த முகம் பார்க்கும் கண்ணாடிகளும், சீப்புகளும் உடைந்து விட, கோபாலனின் கண்ணாடியும், சீப்பும் மட்டுமே எஞ்சியிருக்கிறது. தந்தத்தால் செய்யப்பட்ட அவனது அந்த வெள்ளை நிறச் சீப்பைக் கொண்டு அவனது நண்பர்கள் அவனது கண்ணாடி முன் நின்று தலை வாருவதைக் கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறான்.
தன்னுடைய சீப்பை அவர்கள் உபயோகப்படுத்தி அழுக்காக்கி வைப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத கோபாலன், “இனி இந்தச் சீப்பை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிடுகிறான்.
ஆனால் அவனால் வேறு சீப்பு வாங்க முடியவில்லை. வேறு வழியின்றி அவர்கள் நால்வருமே அந்த ஒரே சீப்பை பயன்படுத்துகின்றனர். கோபாலனுக்கு இப்போது அந்தச் சீப்பு குறித்து எந்த வருத்தமும் இல்லை.
இக்கதையில் உள்ள பெரும் படிப்பினை, பெரும் மதிப்புள்ளதோ, மதிப்பற்றதோ, ஒன்றன் மீது தனது என உரிமை கொண்டு வைக்கும் பற்றின் காரணமாக, மனம் எவ்வளவு துாரம் அதைத் துாக்கிச் சுமக்கிறது, அதை உதறிய பிறகு மனம் இலேசாகி விடுகிறது. இங்கு, இந்த நுண்ணிய தத்துவத்தை இயல்பான வாழ்க்கை நிகழ்வுகள் மூலம் வாசகனுக்கு உணர்த்துகிறார் கி.ரா.
'காய்த்த மரம்' என்ற கதையில்நான்கு ஆண் பிள்ளைகள், நான்கு பெண் பிள்ளைகள் என எட்டுப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, ஓரளவு வசதியான நிலையில் வாழ்ந்த பெற்றோர், முதுமையை கருத்தில் கொண்டு தங்கள் சொத்துகள், கையிருப்புகள் அனைத்தையும் மகன்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு, அதன் பலனாக அவர்கள் அனுபவிக்கும் துன்பத்தைப் பற்றியது.
மகன்களை அண்டி வாழும் நிலையில், மகன்களின் வீட்டில் அவர்களுக்கு ஏற்படும் மரியாதைக் குறைவும், உதாசீனங்களும் அதிகமாக, அந்த தம்பதியர் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு, கண் காணாத இடத்துக்கு செல்கின்றனர்.
பெற்ற பிள்ளைகளால் முதுமையில் அனாதையாகும் முதியவர்களை பற்றி உருக்கமாக சொல்லி இருக்கிறார். இக்கதையை வாசிப்போருக்கும் கண்ணீரை அடைத்திட தாளேதும் இல்லை.
பெரும் மதிப்புள்ளதோ, மதிப்பற்றதோ, ஒன்றன் மீது தனது என உரிமை கொண்டு வைக்கும் பற்றின் காரணமாக, மனம் எவ்வளவு துாரம் அதைத் துாக்கிச் சுமக்கிறது, அதை உதறிய பிறகு மனம் இலேசாகிவிடுகிறது.

