நா(ண)நயம் முக்கியம்; முதல்வரிடம் கெஞ்சி கேட்கும் டாக்டர்கள்
நா(ண)நயம் முக்கியம்; முதல்வரிடம் கெஞ்சி கேட்கும் டாக்டர்கள்
UPDATED : ஆக 24, 2024 12:00 AM
ADDED : ஆக 24, 2024 07:54 PM
சென்னை:
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் அரசு டாக்டர்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு நாணயம் வெளியிடும் இந்நாளில் அவர் பிறப்பித்த ஆணையை நிறைவேற்ற தமிழக அரசு மறுப்பது ஏன்? கோவிட் காலத்தில் முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நாநயம் மீறுவது நியாயமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் எஸ். பெருமாள் பிள்ளை கூறியிருப்பதாவது:
கருணாநிதி வெளியிட்ட ஆணை
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்திய தமிழக முதல்வர், தன் தந்தையின் அரசாணைக்கு (GO.354) உயிர் கொடுக்க வேண்டும்: மறைந்த முதல்வர் கருணாநிதி நாணயம் வெளியீடு என்பது அவரது புகழ் மகுடத்தில் மற்றொரு வைரம் என முதல்வர் தெரிவித்துள்ளார். ஆம். அதுபோலவே அரசு மருத்துவர்களுக்காக. 2009 ம் ஆண்டில் கருணாநிதி வெளியீட்ட அரசாணையும் (GO.354) கூட சமூக நலனை அடிப்படையாக கொண்டு தான் வெளியிட்டார்.
இருப்பினும் அரசாணை நீண்டகாலமாக அமல்படுத்தப்படவில்லை. திமுக ஆட்சி அமைந்ததும் கிடப்பில் போடப்பட்டுள்ள தன் தந்தையின் அரசாணைக்கு உயிர் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் சொன்னதை செய்யவில்லை. இதிலிருந்து, கருணாநிதியின் கொள்கையை, திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற அரசு தயாராக இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.
அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை 6 வாரத்திற்குள் நிறைவேற்றிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் 6 மாதங்கள் கடந்த பின்னரும் கோரிக்கையை அரசு நிறைவேற்றாமல் பிடிவாதமாக உள்ளது. சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக சிறப்பாக உள்ளது. அதேநேரத்தில் தங்கள் ஊதியத்திற்காக மருத்துவர்களை தொடர்ந்து போராட வைக்கும் ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது என்பது தான் வருத்தமான உண்மை.
மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம் என்பது மக்களின் சுகாதாரத்திற்கான முதலீடு தானே தவிர செலவினம் அல்ல என்பது முதல்வருக்கு தெரியும். எனவே கருணாநிதிக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த நேரத்தில், அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்க வேண்டுகிறோம்.
இவ்வாறு கூறியுள்ளார்.