UPDATED : ஏப் 23, 2024 12:00 AM
ADDED : ஏப் 23, 2024 10:33 AM
கிருஷ்ணகிரி:
அரசின் நலத்திட்ட உதவி களை மாணவர்களுக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்படும் ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்ல, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
புதுமையையும் தொழில்நுட்பத்தை புகுத்தி, கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களை கண்டறிந்து, அவர்களின் கல்வித்திறன் மற்றும் கற்பித்தல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், மூன்று படி நிலைகளுடன், 75 சதவீதத்திற்கு மேல் பெற்றவர்களுக்கு, 'கனவு ஆசிரியர்' விருதை தமிழக பள்ளிக் கல்வித்துறை வழங்குகிறது.
அதன்படி தமிழகம் முழுவதிலும், 380 ஆசிரியர்களை விருதுக்கு தேர்வு செய்து, பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து, 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளங்காமுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கார்த்திக், தொரப்பள்ளி அக்ரஹாரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை ரேவதி, தேவசானப்பள்ளி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கீதா, பகவதி, மூக்கண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திவ்யா, சாரகப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை அகிலா, உண்டியல் நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி லதா லட்சுமி, குந்தாரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கார்த்திகா, நாகரசம்பட்டி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணி, வரட்டனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை பாரதிபிரியா, சீதாராம் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பிரியதர்ஷினி ஆகியோருக்கு, தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது கிடைத்துள்ளது.