1 லட்சத்தை தாண்டியது இன்ஜி., மாணவர் சேர்க்கை: விரைவில் இறுதி ஒதுக்கீடு ஆணை
1 லட்சத்தை தாண்டியது இன்ஜி., மாணவர் சேர்க்கை: விரைவில் இறுதி ஒதுக்கீடு ஆணை
UPDATED : ஆக 23, 2026 04:41 AM
ADDED : ஆக 23, 2026 04:41 PM

சென்னை:
இன்ஜினியரிங் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வில், 68,640 மாணவ, மாணவர்களுக்கு பி.இ., பி.டெக்., தற்காலிக ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
அண்ணா பல்கலை.,யின் கீழ், 418 இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, 13ல் தொடங்கி நடந்து வருகிறது. முதல் கட்டமாக, சிறப்பு பிரிவு கலந்தாய்வில், 950 பி.இ., பி.டெக்., இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பொதுப்பிரிவு முதல் சுற்று கலந்தாய்வில், 28,029 மாணவர்களுக்கும், 2ம் சுற்று கலந்தாய்வில், 59,951 மாணவர்களுக்கும் பி.இ., பி.டெக்., இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 3ம் சுற்று கலந்தாய்வு, 17ம் தேதி தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்க, 1 லட்சத்து, 2,719 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்ய, 19ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்த மாணவ, மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு ஆணைகள் வெளியிடப்பட்டன.
இதில் பொதுப்பிரிவில், 66,159 மாணவர்கள்; 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 2,481 மாணவர்கள் என, மொத்தம், 68,640 பேருக்கு சேர்க்கைக்கான தற்காலிக ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த ஒதுக்கீட்டை உறுதி செய்ய, ஆக., 22ம் தேதி மாலை 05:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இறுதி ஒதுக்கீடு ஆணை, ஆக., 23ம் தேதி வெளியாகிறது. இரண்டு சுற்றுகள் நிறைவில், 88,930 மாணவர்கள், பி.இ., பி.டெக்., படிப்பில் சேர்ந்தனர்.
தற்போது, 66,640 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், 1 லட்சத்து 57,570 மாணவர்களுக்கு இன்ஜி., இடங்கள் கிடைத்துள்ளன. இறுதி ஒதுக்கீடு ஆணை வெளியிடும் போது, இந்த எண்ணிக்கையில் மாற்றம் இருக்கும்.
