UPDATED : ஜன 20, 2026 12:46 PM
ADDED : ஜன 20, 2026 12:47 PM

சென்னை:
'ஸ்வயம்' இணையதளம் வாயிலாக, ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு, 'ரோபோட்டிக்ஸ், அனிமேஷன்' உள்ளிட்ட படிப்புகள், இலவசமாக வழங்கப்பட உள்ளன.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ், கல்வியை ஆன்லைன் முறையில் பரவலாக்க, 'ஸ்வயம்' என்ற இணையதளம் செயல்படுகிறது. இதன் வாயிலாக, பணியில் உள்ளோர், வல்லுனர்கள், மாணவர்கள் தங்களின் டிஜிட்டல் மற்றும் புதிய துறை சார்ந்த அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இதில், நாட்டின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் துறை சார்ந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பயிற்சி அளிப்பர்.
அந்த வகையில், பனாரஸ் ஹிந்து பல்கலை பேராசிரியர்கள் அபிஷேக்குமார், அச்சிந்தியா சங்கால் ஆகியோர், 'அனிமேஷன்' குறித்த பாடங்களை, 15 வாரங்களுக்கு நடத்த உள்ளனர்.
அதேபோல், அன்றாட பணிகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு சார்ந்த வகுப்புகளை, மும்பை ஐ.ஐ.டி., பேராசிரியர் கண்ணன் மவுத்கல்யா நடத்த உள்ளார். கான்பூர் ஐ.ஐ.டி., பேராசிரியர் ஆஷிஷ்த்தா, ரோபோட்டிக் படிப்பை வழங்க உள்ளார். மேலும் விபரங்கள், 'https://swayam.gov.in/' என்ற இணையதளத்தில் உள்ளன.

